பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



இந்தத் தொழில் நகரத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிக் காலத்தில். கோவை ஜி.டி. நாயுடு அவர்களால் உருவாக்கப்பட்ட யு.எம்.எஸ். என்ற மோட்டார் சர்வீஸ் நிறுவனம், ஏறக்குறைய இருநூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளின் வருவாயில் கோவை மக்கள் இடையேயும்; கேரள மக்கள் எல்லையோர நகரங்கள் இடையிலும்; பெயரோடும், புகழோடும் ஆல்போல் தழைத்து, விழுதுகள் விட்ட செல்வ பலத்தோடும் வளர்ந்து இருந்தது.

மோட்டார் மன்னன் ருத்தர் ஃபோர்டால், மோட்டார் தொழில் கண்டுபிடிப்புகளாலும் - வளர்ச்சிகளாலும் எப்படி அமெரிக்கா உலகப் புகழ் பெற்று விளங்கியதோ, அதே போல தொழிலியலில் விஞ்ஞானியாக வளர்ச்சிப் பெற்ற ஜி.டி. நாயடு அவர்களாலும், அவரைத் தலைவராகப் பெற்றிட்ட யு.எம்.எஸ். மோட்டார் நிறுவனத்தாலும் - கோயம்புத்தூர் நகரமும், அந்த மாவட்டமும் பெயரும் புகழும் பெற்று விளங்கியது என்றால் - மிகையாகா.

கோவை மக்கள் இடையே யு.எம்.எஸ் நிறுவனம் செல்வாக்குப் பெற்றதற்கு அடிப்படைக் காரணம், ஜி.டி. நாயுடுவின் இடைவிடா உழைப்பும், முயற்சியும்தான் என்று கோவை நகர் வரலாறு கூறுகின்றது.

ஜெர்மன் தம்பதியர்க்கு
நாயுடு உதவிகள்

கோவை நகரில் யு.எம்.எஸ். நிறுவனம் புகழ் பெற்று விளங்கிய நேரத்தில், 1929-ஆம் ஆண்டு வாக்கில், ஜெர்மனி நாட்டிலே இருந்து Kuhns என்ற ஒரு வியாபாரி தனது மனைவியுடன் கோவை நகர் வந்திருந்தார்.

இந்த செர்மானிய வணிகரும், அவரது வாழ்க்கைத் துணை நலமும் இந்தியாவிற்கு வந்து, இந்திய நகர்களை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, தங்களது இரப்பர் பொருட்களுக்கு இந்தியாவில் வாணிக செல்வாக்கு உண்டாகுமா என்பதையும் கவனித்து கொண்டே வந்தார்கள். அவ்வாறு அவர்கள் வரும்போதுதான், கோவை மாநகருக்கும் வந்தார்கள்.