பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



செர்மன், இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா போன்ற நாடுகளை வலம் வந்து, ஆங்காங்குள்ள சமூக, பொருளாதார, வணிக, அறிவியல், தொழிலியல் நகரங்களையும், அங்கே உள்ள தொழிலியல், அறிவியல் வளர்ச்சிகளையும் அறிந்துணர்ந்த திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் - கீழ் நாட்டு வணிக நாடாக விளங்கிக் கொண்டிருந்த ஜப்பான் நாட்டுக்கும் சென்றார்.

சப்பான் நாட்டின் பல்வேறு தொழில் வளர்ச்சி நிறுவனங்களுக்குள் சென்று நாயுடு அவர்கள் பார்வையிட்டார்! அதனதன் தொழில் துணுக்க விவரங்களை, ஐயங்களை விவரமாகக் கேட்டறிந்து தெளிவடைந்தார் - அவர்.

அறிவுடையார்:
சப்பானியர்!

சப்பான்காரனுக்கு ஒரு கிலோ இரும்பு கிடைத்தால்போதும். அதை அந்த நாட்டார் உருக்கி, காய்ச்சி, அடித்து, ஒடித்து மக்களுக்குப் பயன்படும் அறிவியல் புதுமைகளை உடையக் கருவிகளைக் கண்டுபிடித்து, அதை உலகச் சந்தையில் விற்பனை செய்யும் அறிவுடையார் ஆவர்!

நமது நாட்டில்தான் இன்றும்கூட, அமாவாசை நாள் வந்ததும், கடைகள், தொழிற்கூடங்களில் பூசனிக் காய்க்கு மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, பூசணியைத் துளைத்து உள்ளே குங்குமத்தைக் கொட்டி, அதை ரத்தக் குழம்பாக்கி, காசுகளைப் பூசணித் துளைக்குள் போட்டுத் துருத்தி, கற்பூரம் கொளுத்தி, தொழிற் கூடங்களை மூன்று முறைகள் சுற்றிச் சுற்றி, போதாக் குறைக்கு தொழிலாளிகளையும் - முதலாளிகளையும் வரிசையாக நிறுத்தி, அவர்களையும் சுற்றி நடு வீதியிலே கொண்டு போய் போட்டு உடைத்து தெருவை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றானே, இவன் எப்படி தேறுவான்? முன்னேறுவான்? சப்பான்காரனைப் போல உலக வல்லரசு நாடுகளிடம் போட்டிப் போடும் பொருளாதார, அறிவியல், தொழிலியற் துறைகளில் எப்படிக் கடைத் தேறுவான்? எண்ணிப் பாருங்கள்!

சப்பான் நாட்டின் தொழில் முன்னேற்ற வளர்ச்சிகளை நன்கு உணர்ந்த திரு. நாயுடு அவர்கள், பிறகு மஞ்சூரியா நாட்டுக்கும்