பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



நடந்த இரயில் விபத்தில் திரு. நாயுடு சிக்கி, உயிரிழந்து, உடல் சிதைந்து விட்டார் என்று எண்ணிய அந்த நண்பர்கள் வருத்தத்தோடு இலண்டன் நகர் திரும்பி விட்டார்கள்.

இரயில் விபத்தில்
உயிர் தப்பினார்

திரும்பி வந்த தனது நண்பர்களை திரு. நாயுடு வாயிற்படியிலே நின்று வரவேற்றதைக் கண்ட அவர்கள் பிரமித்து விட்டார்கள். எப்படித் தப்பித்து வந்தீர்கள் என்று நண்பர்கள் கேட்டபோது, "நான் இரயில் புறப்பட ஒரு மணி நேரம் இருக்கும் போது, முன்னதாகவே இரயில் நிலையத்திற்குள் வந்து விட்டேன்.

அப்போது வேறொரு இரயில் இலண்டன் மாநகருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அதில் ஏறிவிட்டேன். எனக்குக் காலம்தான் முக்கியமே தவிர, வண்டியின் வசதிகள் அல்ல. காலம்தான் என்னைக் காப்பாற்றி விட்டது என்று அவர்களிடம் திரு. நாயுடு அமைதியோடு பதில் கூறினாராம். நண்பர்கள் நாயுடுவைக் கட்டித் தழுவி மகிழ்ந்தார்கள்.

உலகத்தை முதல் முறையாகச் சுற்றிவிட்டு வந்த பெருமகன் நாயுடுவை; தமிழ்நாட்டில் திரளான நண்பர்கள், திரண்டு வந்து வரவேற்றார்கள். இவ்வாறு திரு. நாயுடு அயல் நாடுகளைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்த சுற்றுப் பயணம் அவருக்கு வெற்றியாக இருந்தது.

உலக நாடுகளில் திரு. நாயுடு செய்த சொற்பொழிவுகளை தமிழ் நாட்டுப் பத்திரிக்கைகள் வெளியிட்டு அவருடைய தொழில் நுட்ப உணர்வுகளைப் பாராட்டி எழுதின.

பத்திரிக்கை நிருபர்கள் அவரிடம் பேட்டி கண்டு, அவரது மேல் நாட்டுச் செய்திகளை வெளியிட்டார்கள். தமிழ்நாடு முழுவதுமாகத் திரு. ஜி.டி. நாயுடு அவர்களின் புகழ் மேலும் பரவியது.