பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்109


அவனுக்கு அவள் செயல் கசக்கவில்லை. என்றாலும், "ஐய, என்ன இது தேவகி" என்று சொல்லி வைத்தான், "ஜோரா முன்னேறிக் கொண்டிருந்த கவிதை ஒட்டத்தைத் தடுத்து விட்டாயே!" என்று முணங்கினான்.

தேவகி சிரித்தாள். அவள் விரல்கள் அவன் முகத்தை நிமிர்த்தின. "இனிய கவிதையாக நானே வந்துவிட்ட பிறகு, வறண்ட சொல் ஓட்டம் பற்றி நீ ஏன் கவலைப்பட வேண்டும்?" என்றாள். நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடிப்பதற்காக நீண்ட நீண்ட வசனங்களை மனப்பாடம் செய்து பேசிப் பழக்கப் பட்டவள்தானே அவள் அதனால் அன்றாட வாழ்விலும் தேவகியின் பேச்சில் நாடகத்தனம் கலந்து காணப்படாமல் போவதில்லை.

நாடகங்களிலும் படங்களிலும் அவளுக்குரிய பாடல்களை-சில சமயம் வசனங்களையும்.எழுதிக் கொடுப்பவன் ராஜா. அவனுக்கு அவளும், அவளுக்கும் அவனும் காந்தமாயினர். அவர்களது கூட்டுக் களிப்பினிலே இன்பக் கவிதை நிறைந்து திகழ்ந்தது.

தேவகி மிகுந்த புகழ்பெற்ற நடிகை அல்ல, மிகப் பலரின் கண்களை கூசச் செய்கிற நட்சத்திர அந்தஸ்தை அவள் பெற்றிரா விட்டாலும், அவள் பெயருக்கு ஒரு வசீகரத்தை ஏற்படுத்தும் அளவுக்கு போதுமான புகழ் அவளுக்கு இருந்தது. அவளிடம் பணம் தாராளமாக புரண்டு கொண்டிருந்தது. அவளுக்கு என்று அழகான சிறு கார் ஒன்றும் இருந்தது. சொந்த வீடு கட்டுவது பற்றி திட்டமிட்டு வந்தாள் அவள்.

இவ்வளவு வாழ்க்கை வசதிகளும், மேலும் வளர்ச்சிக்கு உரிய வழிவகைகளும் பெற்றிருந்த தேவகி,