பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172 ★ வல்லிக்கண்ணன்


“பொன்னுசாமி எங்கே?” என்று அதட்டிக் கேட்டார் அவர்.

“பய எங்கே போனான்?” என்று பலரக முனு முனுப்புகளும், அநேக விதமான பார்வைகளும் சுற்றுப் புறத்தைத் துழாவின.

“இதோ இருக்கேன், எசமான்” என்று பதறி அடித்து முன்னே வந்தான் பொன்னு,

"இங்கே யாரு உன்னை மிரட்டியது”?

பொன்னுசாமி திருதிருவென்று விழித்தான்.

“சொல்லேன்டா, வாயிலே என்ன கொழுக் கட்டையா திணிச்சிருக்கு? அங்கே வந்து ரிப்போர்ட் பண்ணினியே?” என்று எரிந்து விழுந்தார் சுயம்பு.

“முத்துமாலை, காத்தலிங்கம், ஒண்டிப்புலி” என்று முனகினான் போன்னு.

"ஒண்டிப்புலியா யாரு?" என்றார் அவர்.

“நான்தான் எசமான்!” என்று முன்னால் வந்து நின்றது வஞ்சனை இல்லாமல் வளர்ந்த உருவம் ஒன்று.

“உன் தொழில் என்ன?” என்று விசாரித்தார் சுயம்பு,

“சுக ஜீவனம்!”

"சாப்பாட்டுக்கு வழி?”

“அம்மா கவனிச்சுக்குறாங்க. அவங்க கடை நடத்துறாங்க! நல்ல வியாபாரம்” என்று விடை கிடைத்தது.

சுயம்புலிங்கம் பிறகு விசாரித்து அறிந்து கொண்ட விவரம் இது.