பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் ★ 178


ஒண்டிப் புலியின் வேலை சூதாடுவது, ரேசுக்குப் போவது, குடிப்பது, ஏமாந்தவர்களிடம் பணம் பிடுங்கி ஜாலியாகச் செலவு பண்ணுவது; அவனுக்கு இரண்டு மனைவிகள். ஆசைநாயகி ஒருத்தியும் உண்டு.

அப்போது பொன்னுசாமி பேரிலும் அப்படி ஒரு குற்றச்சாட்டைக் கூறினான் ஒண்டிப் புலி. “நான் இல்லாத சமயத்திலே இந்தப் பொன்னுப் பய வீட்டிலே போயி, பொம்பளை கிட்டே கேலி பேசியிருக்கிறான். அவகிட்டே தகாத முறையிலே நடந்திருக்கிறான். அதனாலே நான் எச்சரிச்சி வச்சேன்” என்றான்.

சுயம்பு, பொன்னுசாமியை முறைத்தார். “ஏமி லேய், திமிரா? நீ ஏண்டா அப்படிச் செய்தே? உன்னையும் ஸ்டேஷன்லே தள்ளி சரியா கவனிக்க வேண்டியதுதான் போலிருக்கு!” என்று கர்ஜித்தார்.

“இல்லை எசமான் நான் வந்து...”

“வந்தாவது, போயாவது? ஜாக்கிரதை! உன் மேலேயும் ஏதாவது ரிப்போர்ட் வந்தால், அவ்வளவுதான். முதுகுத்தோலை உரிச்சுப் போடுவேன், ஆமா!” என்று சுயம்பு. “எல்லாருக்கும் இதே வார்த்தைதான். இனி மேல் ரிப்போர்ட் வந்ததோ தொலைச்சுடுவேன் தொலைச்சு எச்சரிக்கையா நடந்துக்குங்க!” என்று ஒரு போடு போட்டார்!

அங்கே நின்றவர்கள் கலக்கத்துடன் தலையை ஆட்டினார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

சுயம்புலிங்கம் விறைப்பாக சைக்கிளில் ஏறி அழுத்தி மிதித்தார். திரும்பிப் பாராமலே வேகமாக முன்னேறினார்.