பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42வல்லிக்கண்ணன்

 கால்களை மடக்கி, தானே ஒடுங்கிக் கோணிக் கிடக்க நேர்ந்தது. இந்தப் பெஞ்சில், சிதம்பரத்தின் அருகில், துங்கியவளுக்கு நல்ல வசதி.

அவள் தலைமாட்டில், சாளரத்தை ஒட்டி, அவன் ஒடுங்கியிருந்தான். பெஞ்சில் இடம் பிடித்து அமர்ந்திருந்த மற்றர்வர்கள் கீழே பலகைப் பரப்பிலும், மேலே கட்டைகளிலும் படுக்கப் போய்விட்டார்கள். எனவே, அந்தப் பெண் கால்களை நீட்டிச் சுகமாகப் படுத்துத் தூங்க முடிந்தது. வாயினால் ஊதி ஊதி, உள்ளே காற்றைப் புகச் செய்து பருமனாக்கிக் கொள்ளக்கூடிய ரப்பர் தலையணை வேறு வைத்திருந்தாள் அவள். ஓடும் வண்டியின் அசைவு காரணமாக அவளது உணர்வற்ற உடல் நகர்ந்து மெதுமெதுவாக அவனைத் தொட நெருங்கிக் கொண்டிருந்தது. அவள் தலை அவனைத் தொட்டுவிட்டது. தடித்த சடைப் பின்னல் தலையை அழுத்தியிருக்கும் போலும், அவள் விழிக்காமலே, அதை எடுத்துப் பின்னால் தலைக்கு மேல் வீசினாள். அப்படி வீசிய வேகத்தில் அது நெளிந்து வந்து சிதம்பரத்தின் மடிமீது. விழுந்தது. மினுமினுக்கும் கருநாகம் போன்ற குழற் பின்னல் அது.

அதைத் தொட வேண்டும் என்ற ஆசை சிதம்பரத்துக்கு எழுந்தது. அவ்வாறு தொட்டால் அவள் விழித்து விடுவாளோ என்ற பயமும் சந்தேகமும் கூடவே தோன்றின. துங்கும் பெண்ணின் கூந்தலைத் தொடுவதனால் அவள் உணர்வு விழிப்பு பெறப்போவதில்லை என்று துணிந்தான் அவன்.

பெண்ணின் கூந்தல் அழகு, அதன் மென்மை, இனிமை முதலியன பற்றியும், அதை விரும்புவதாலும், பிடித்து இழுப்பதாலும் ஏற்படக் கூடிய மகிழ்ச்சி பற்றியும் அவன் எங்கேங்கோ எவ்வளவு எவ்வளவோ படித்திருந்தான். அதுவரை அப்படியொரு சுகானுபவம் அவனுக்கு ஏற்பட்டதில்லை. இப்போது அதை