பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் 49


அவரது சாதாரண நாட்களுக்கு விசேஷ உயிர்ப்பு தந்து கொண்டிருந்தார்கள். அனைவரிலும் ஆண்டியாபிள்ளைக்கு அண்ணாச்சியிடம் தனிப்பிடிப்பு: ஒரு தீவிரமான பற்றுதல். தனித்துச் சொல்லும்படியான காரணம் எதுவும் கிடையாது. உள்ளத்தில், உணர்வில், இயல்பாகத் தோன்றி வலுப்பெற்றுவிட்ட அன்பின் பிணைப்பு.

அதனால் அண்ணாச்சியை நீண்ட காலம் பாராமல் இருந்து விட்டது- அவருடன் பேச்சுப் பரிமாற்றம் செய்து ஊர் விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல் போனது- பெரும் குறைவாகவே பட்டது அவருக்கு. இது அவர் உள்ளத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது.

அந்த உணர்வுதான் அவரை பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நேராக கைலாசம்பிள்ளை வீட்டு உந்தித் தள்ளியது.

தெருவாசல்படியில் கால் வைக்கும் போதே, ‘'அண்ணாச்சியோவ்! என்று குரல் கொடுத்தார் ஆண்டியாபிள்ளை.

திண்ணையில் இருந்த தம்பி சோமசுந்தரம், வாங்க!” என்று அவரை வரவேற்றான். உட்காருங்க!” என்றான். அவரை ஒருமாதிரியாகப் பார்த்தான்.

தோளில் கிடந்த துண்டை எடுத்து, திண்ணைப் பட்டியக்கல்லில் தூசிதட்டிவிட்டு, துண்டை மடித்தவாறே போட்டு அதன் மீது உட்கார்ந்தார் ஆண்டியா பிள்ளை. பெரியவாள் வீட்டுக்குள்ளே என்ன செய்றாக? வெளியே காணோமே?’ என்று கேட்டார்.

'உங்களுக்குத் தெரியாது? அண்ணாச்சி இல்லை, இறந்து போயிட்டாக...”