பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு தடவையேனும்...

பூட்டிய உதடு மனமலடு!
போடா மூடா அதனைவிடு!
ஏட்டில் புனையாப் பாடல்களை
இசைக்கும் யாழாய் இதழ்திறப்பாய்!

சிரித்துச் சிரித்து விளையாடு!
சின்ன நிமிடமும் தொலைக்காதே!
அரிக்கும் கவலைகள் ஆயிரமா? அவைகளைக் காலால் நசுக்கிவிடு!

வீணாய்ப்போன தென்னாளோ?
வினவிய நானே கூறுகின்றேன்,
வீணைப் பாட்டாய்ச் சிரிக்காமல்
விட்டு விட்ட நாளதுதான்!

ஆகவே மைந்தா சிரித்தாடு!
ஆயிரம் கைதட்டி மகிழ்ந்தாடு!
போகும் நாளில் ஒருதரமேணும்
பொங்கி மகிழ்ந்தே சிரித்தாடு!