பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

60



பொங்கர வாவோம்! பசிப்புலி ஆவோம்!
பூமியைக் கீறும் எரிமலை ஆவோம்!
மங்கள முரசுகள் மாற்றுக சுருதியை!
மாணிக்க யாழும் போர்ப்பறை முழங்குக!
பங்கொடு சென்றவர் பாதை இடறி -
பாழ்மனப் பேயரின் கைப்பா வையாய்
இங்குறு அறத்தின் எழுச்சியைக் கொய்ய
எல்லை மிதித்தனர்! தொல்லை கொடுத்தனர்!


தெங்குறு காயுடன் இளநீர் போலச்
சேர்ஜன நாயக நமதரு மத்தை
துங்க முறவே தொட்டி லிட்டே
சுதந்திரச் சுடரைப் போற்றிடும் நம்மேல் -
சங்கிலித் தொடர்போல் சதியும், கேடும்
தம்கோட் பாடாய் கொண்டனை சழக்கர்:
கங்குவின் கருத்தினர் பழிகொளப் பாய்ந்தே
கவ்வினர் மண்ணை காறிய துலகம்!


நெறிக ளற்றவர்; முறைகளற்றவர்;
நெஞ்செனும் ஒன்றிலா நிருதர் வழியினர்
வெறியுடன் நம்மேல் சுமத்தினர் விண்போர்!
வென்றோம்! வெல்கிறோம்! இனியும் என்றும்
துறைதுறை யாகத் தொடர்ந்தும் வெல்வோம்!
தோற்கலாத் தோளினர் நமதரும் படையின்
செறியும் சாகசம், தியாகம் கண்டே
சிலிர்த்தது புவியே! செழித்தது வீரம்!