பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

55


"அவரேதான்!”

“பழைய வாத்தியார்கள் ‘பாடம்’ என்றதும் அகராதியைத் தூக்கி உங்கள் கையிலே கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னீர்கள்; புது வாத்தியார் எப்படி?”

“அவர்களைவிடமோசம்; என்னைக் கண்டதும் புத்தகத்தை மூடிக் கீழே வைச்சிடுவார். என் தலை மறைஞ்சப்புறந்தான் அதை எடுத்துப் பிரித்து மத்தவங்களுக்குப் பாடம் நடத்துவார்!”

“குருவைக் கண்டு சீடன் பயப்படுவதற்குப் பதிலாகச் சீடனைக் கண்டு குருவே பயந்தார் போலிருக்கிறது!”

“பயப்படறவன் குரு, சீடனைப் பார்த்து மட்டும் இல்லே; யாரைப் பார்த்தாலும், எதைப் பார்த்தாலும் பயந்துக்கிட்டுத்தான் இருப்பான்!”

“எம்.கே.ராதா ?”

“அவரையும் என்னுடன் சேர்ந்து நடிக்கவிடமாட்டார் அவருடைய அப்பா. அப்படியே நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் ‘பத்திரம், பத்திரம்’னு சொல்லிக்கிட்டு அவருக்குப் பக்கத்திலேயே இருப்பார்...இந்த மாதிரி ஆளுங்க பயம் எதிலே போய் முடிஞ்சதுன்னா, எனக்கு எதிரா போடிநாயக்கனூரானைக் கெளப்பி விடறதிலே போய் முடிஞ்சது...”

“அது யார் அந்தப் போடிநாயக்கனூரான் ?”

“அவன் ஒரு ஸ்டண்ட் நடிகன்; என்னை விடக் கொஞ்சம் பலசாலி. நாடகத்திலே வர சண்டைக் காட்சியிலே அவன் என்னோடு கட்டிப் புரண்டு சண்டை போடுவான். அதை வைச்சிக் கம்பெனியிலே எனக்கு எதிரிங்களாயிருந்த சில பேரு ஒரு சூழ்ச்சி செய்தாங்க...”

“என்ன சூழ்ச்சி ?"