உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

விடுதலைப் போராட்டத்தில் இவர் முனைப்புடன் பங்கு கொண்டிருந்தபொழுது, பிரெஞ்சிந்திய அரசுக் காவலர்கள் (போலீசார்) தொண்டர்களை விலங்குத்தனமாகத் தாக்கினர். அப்போது இவர், புதுவை எல்லைப் பகுதிக்கு அப்பால் தப்பித்துச் சென்று அங்கிருந்தபடியே போராட்டத்தை முனைப்புடன் தொடர்ந்து கொண்டிருந்தார்.

பின்னர், புதுச்சேரியை இந்தியாவுடன் இணைப்பதற்காகக் கீழுர் என்னும் இடத்தில் 18-10-1954 ஆம் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில், நகரமன்ற உறுப்பினராகிய இவரும் கலந்துகொண்டு வாக்களித்தார். கீழுரில் நடப்பட்டுள்ள சலவைக் கல்தூணில் இவர் பெயரும் பொறிக்கப் பெற்றுள்ளது.

விடுதலை வீரர் என்ற சிறப்புப் பெயர் பெற்ற இவர், இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சராகிய பண்டித ஜவகர்லால் நேருவால் பாராட்டப் பெற்றுள்ளார். இடைக்கால விடுதலை அரசாங்கத்தில் முத்தியால் பேட்டைப் பகுதிக்குத் தலைவராயிருந்தார்.

இவர் ஒரு காலத்தில் பெரியார் ஈ.வே.ரா. அவர்களின் சீர்திருத்த இயக்கத்தில் பிடிப்பு உடையவராக இருந்தார்; பொதுவுடைமை வாதியாக இருந்ததும் உண்டு.

வள்ளன்மை:

இவர் சிறந்த வள்ளலாகவும் திகழ்ந்தார். கல்வி வளர்ச்சிக்காக — குறிப்பாகப் பெண் கல்வியின் முன்னேற்றத்திற்காக மிகவும் பாடுபட்டார். தமது ஊராகிய முத்தியால் பேட்டையில் பெண்கள் பள்ளிக்காக இரண்டு கட்டிடங்களை நன்கொடையாக அளித்துள்ளார். விளையாட்டுத் திடலும் ஈந்துள்ளார்.