பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2. செயற்கரும் செயல்கள்

இனி, பேச வேண்டிய பேச்சு எல்லாம் அவர்கள் செய்த செயற்கரும் செயல்களே. இந்த நல்ல நாளில் அவர்கள் பிறந்த நாளை எண்ணிப் போற்றுவது நல்லது. செயற்கரும் செயல், பிறராலே செய்ய முடியாத அரிய பெரிய செயல்கள். அதில் ஐம்பெருங் கடமைகள் முதலிடம் பெற்றவை.

ஐம் பெரும் கடமைகள்

ஐம் பெருங்கடமைகள் என்பவை நாயகம் அவர்கள் செய்த செயல்களில் எல்லாம் மிகப் பெரும் செயற்கருஞ் செயல்கள். அவற்றில் முதலிலே உள்ளது கலிமா. "லா இலாஹ இல்லல்லாஹ முகமது ரசுலில்லாஹி" என்பது. "வணக்கத்துக்குரியவன் ஆண்டவன் ஒருவனே. அவனது திருத்தூதரே முகமது நபி" என்பது அதன் பொருள். இது ஒரு போர் வீரன், படையின் உள்ளே நுழையும் போது எடுத்துக் கொள்ளுகின்ற ஒரு சத்திய வாக்குப் போன்றது. சட்டசபைக்கு செல்கின்ற உறுப்பினர்கள் எல்லாம் ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்வது போன்றது. இந்த உறுதிப்பாட்டை ஒப்புக் கொள்ளாதவர்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. ஆகவே, இதை முதலாக வைத்தார்கள். அது எண்ணி, எண்ணி மகிழக் கூடியதொன்று. நம்பிக்கை, உறுதி, கட்டுப்பாடு ஆகிய அத்தனையையும் சேர்த்துப் பின்னப் பெற்றது இந்தக் கலிமா. வேறு ஒரு வகையாகச் சொல்ல வேண்டுமானால், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் என்ற நான்கையும், நான்கு தூண்களாக வைத்தால், இந்தப் புனித கலிமா இதனுடைய கோபுரமாக இருந்து ஒளி வீசக் கூடியது என்று கூறலாம். அதைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்று தொழுகை.