பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92



இந்தச் சாசனத்தை, முஸ்லிம்களின் விரோதிகள் உட்பட மதீனாவில் இருக்கின்ற அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

இதற்கு முன்னர், அரேபியர்களுக்குள் நியாய விசாரணை என்பதே இல்லாமல் இருந்தது. ஒருவருக்குப் பிறரால் கஷ்ட நஷ்டம் உண்டானால், அவர் தம் வலிமையால் அல்லது தம் உறவினர்களின் பலத்தால் மட்டும் அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. இந்த உடன்படிக்கையினால், அந்த வழக்கம் அடியோடு மறைந்தது. அதனால் பெருமானார் அவர்கள் நபி என்ற முறையினாலும், மக்களுக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட உடன்பாட்டிலும், மேலான நீதிபதியாகவும் ஆனார்கள்.

71. பயமுறுத்தல் கடிதம்

மதீனாத் தலைவர் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு, மக்காவிலிருந்த குறைஷிகள் பயமுறுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர்.

அதாவது, “எங்களுடைய மனிதருக்கு, உம்முடைய நாட்டில் புகலிடம் அளித்திருக்கிறீர். நீர் அவரைக் கொன்று விட வேண்டும்; அல்லது அவரை உம்முடைய நாட்டிலிருந்து துரத்தி விட வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், நாங்கள் அனைவரும் உம்முடைய நாட்டின் மீது படையெடுத்து வந்து, உம்மைக் கொன்று, உம்முடைய பெண்களைக் கைப்பற்றுவோம்” என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

கடிதம் வந்த செய்தியை அறிந்த பெருமானார் அவர்கள், உடனே அப்துல்லாஹ் இப்னு உபையிடம் சென்று, “உம்முடைய மக்களுடனும், உம்முடைய சகோதரர்களுடனும் நீர் சண்டை செய்வீரா?” என்று கேட்டார்கள்,

அதற்கு அவர் எதுவும் கூறாமல், சும்மா இருந்து விட்டார். அவருடைய நெருங்கிய உறவினர்கள் அனைவரும் முஸ்லிம்களாகி விட்ட படியால், குறைஷிகளின் கோரிக்கையை அவரால் நிறைவேற்ற இயலவில்லை. ஆனாலும் அவரும், அவருடைய குழுவினரான முனாபிக்குகளும் உள்ளுற முஸ்லிம்களுக்கு விரோதிகளாகவே இருந்தனர்.