பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101



பேர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் ஆறு பேர் முஹாஜிரீன்கள், எட்டுப் பேர் அன்சாரிகள்.

குறைஷிகளின் பக்கம் எழுபது பேர் கொல்லப் பட்டதோடு, எழுபது பேர் வரை சிறை பிடிக்கப்பட்டிருந்தனர்.

கொல்லப்பட்ட எழுபது பேரில், குறைஷிகளின் முக்கியத் தலைவர்கள் எல்லோரும் இருந்தனர்.

சிறை பிடிக்கப்பட்டவர்கள் மதீனாவுக்குக் கொண்டு போகப்பட்டனர்.

அவர்களில், அலி அவர்களின் சகோதரர் அகீலும், பெருமானார் அவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் அவர்களும், பெருமானார் அவர்களின் மருமகன் அபுல் ஆஸூம் இருந்தனர்.

ஆயிரம் போர் வீரர்களும், நூறு குதிரைப் படையும் உணவும், ஆயுதங்களும் தயங்காமல் வழங்குவதற்குப் பல செல்வந்தர்களும், குறைஷிகளின் பக்கம் இருந்தும் கூட, போதிய ஆயுதங்கள் இன்றி, இரண்டு குதிரை வீரர்கள், 313 பேர் அடங்கிய முஸ்லிம் படையானது அவர்களைத் தோற்கடித்து, வெற்றி பெறுவதற்கு ஆண்டவனுடைய பேரருளே காரணமாகும்.

கைது செய்யப்பட்டவர்களைப் பெருமானார் அவர்கள் மிகவும் அன்புடன் நடத்தி வந்தார்கள். அவர்களை இருவர் நால்வராகத் தோழர்களிடம் பிரித்து அனுப்பி, நல்ல முறையில் அவர்களை நடத்தும்படி சொல்லியிருந்தார்கள்.

கைதிகளுக்கு உடுப்பதற்கு உடை இல்லாமல் இருந்தது. பெருமானார் அவர்கள் கட்டளையிட்டவுடன் தோழர்கள், அனைவரும் தங்களுடைய உடைகளைக் கொடுத்தனர்.

பின்னர் கைதிகளை என்ன செய்வது என நபி பெருமானார் தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள்.

எல்லோரும் உறவினர்களாகவும், நெருங்கியவர்களாகவும் இருப்பதால், "மீட்சித் தொகையைப் பெற்றுக் கொண்டு விட்டு விடலாம்” என அபூபக்கர் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.