பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141



அவர்கள் அரசர்களுக்கெல்லாம் மேலான அரசராக இருந்தது போலவே, உழைத்து வேலை செய்வதிலும் சிறப்பான திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் அதுவும் சிறப்புமிக்க ஒரு பகுதியாக இருந்தது.

தோழர்கள் அகழ் வெட்டிக் கொண்டிருக்கும் போது கடினமான பாறை ஒன்று குறுக்கிட்டது. ஒவ்வொருவராக அதை வெட்டிப் பார்த்தார்கள். ஆனால், அதை உடைக்க இயலவில்லை. அதனால் மனம் தளர்ந்த தோழர்கள் அந்தப் பாறையை விட்டுவிட்டு, வேறு பக்கமாக வெட்டலாம் என்ற எண்ணத்தில், பெருமானார் அவர்களிடம் உத்தரவு கேட்டார்கள். பெருமானார் மற்றவர்களிடமிருந்து குந்தாலியை வாங்கி, அகழுக்குள் இறங்கி நின்று அந்தப் பாறையின் மீது ஓங்கி அடித்தார்கள். உடனே அது பிளந்தது. அப்போது ஓர் ஒளி வீசியது! அதைக் கண்டு, நாயகம் அவர்கள் “அல்லாஹூ அக்பர்” என்று சொன்னதும், அங்கிருந்த தோழர்கள் அனைவரும் “அல்லாஹ் அக்பர்” என உரக்க முழங்கினார்கள்.

பெருமானார் அவர்கள் “எனக்கு ஷாம் தேசத்தின் திறவு கோல்கள் கொடுக்கப் பட்டன” என்று கூறி விட்ட, இரண்டாவது முறையும் பாறை அதிகமாகப் பிளவு பட்டது. முன் போலவே அதிலிருந்து ஒளி வீசியது. பெருமானார் அவர்கள், “அல்லாஹூ அக்பர்” எனக்குப் பாரசீக நாட்டின் திறவு கோல்கள் கொடுக்கப் பட்டன” என்று கூறினார்கள். மூன்றாவது முறை உடைக்கவும் பாறை பிளவுண்டு, முன் போலவே ஒளி வீசியது. பெருமானார் அவர்கள், “எனக்கு ஏமன் நாட்டின் திறவு கோல்கள் கொடுக்கப் பட்டன” என்று சொன்னார்கள்.

பின்னர் பெருமானார் அவர்கள் கண்ட காட்சியை விளக்கிக் கூறினார்கள்:

“முதலாவதாக, ரோமபுரிச் சக்கரவர்த்தியான கெய்ஸருடைய ஷாம் மாகாணத்திலுள்ள அரண்மனையும், இரண்டாவதாக, மதாயின் என்னும் நகரத்திலுள்ள பார்ஸி தேசத்துச் சக்கரவர்த்தியான கிஸ்ராவின் அரண்மனையும், மூன்றாவதாக, ஏமன் நாட்டுத் தலைநகரான ஸன் ஆ பட்டணத்தின் அரண்மனையும் காட்டப்பட்டதாகவும், அதே சமயம் ஜிப்ரீல் என்னும் தேவதூதர் வந்து அவர்களைப்