பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151



மற்றொரு நிகழ்ச்சி: குறைஷிகளுடன் சேர்ந்து சண்டைக்கு வந்திருந்த கத்பான் கூட்டத்தாரில் பிரபலமானவரும், மதிப்புமிக்கவருமான நயீமுப்னு மஸ்வூது என்பவர் பெருமானார் அவர்களிடம் வந்து, “ஆண்டவனுடைய தூதரே, நான் மனப்பூர்வமாய் முஸ்லிம் ஆகி விட்டேன். ஆனால், இவ்விஷயம் இதுவரை என்னுடைய கூட்டத்தாருக்குத் தெரியாது. தாங்கள் என்ன கட்டளையிட்டாலும் அதை நான் நிறைவேற்றத் தயாராக இருக்கின்றேன்” என்றார்.

பெருமானார் அவர்கள், “எதிரிகளுக்குள் பிரிவினை உண்டாக்குவதைத் தவிர, ஒரு மனிதனால் வேறு என்ன செய்ய முடியும்?” என்று சொன்னார்கள்.


113. எதிரிகளிடையே பிளவு உண்டாக்குதல்

கத்பான் கூட்டத்தாரும், பனூ குறைலா கூட்டத்தாரும் வெகுகாலமாக நட்புறவோடு இருந்து வந்தார்கள்.

கத்பான் கூட்டத்தாரின் தலைவர் நயீம், குறைலா கூட்டத்தாரிடம் சென்று, தலைவர்களை எல்லாம் அழைத்து,

“நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கேட்கப் போகிறேன். இப்பொழுது, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி சிறிதளவாவது யோசித்தீர்களா? நான் உங்களுடைய பழைய நண்பன்: உங்களுடைய நலத்தை விரும்புகிறவன். நான் சொல்ல வந்ததை வெளிப்படையாகக் கூறி விடுகிறேன். உங்களுடைய நிலைமை வேறு. குறைஷிகளுடைய நிலைமை வேறு. குறைஷிகள் மதீனாவில் நிலையாக இருக்கக் கூடியவர்கள் அல்லர். அவர்களுக்கு மதீனாவில் பிள்ளைகளோ, சொத்துகளோ எதுவுமே இல்லை, சில நாட்கள் இங்கே இருந்து விட்டுப் பிறகு திரும்பிப் போய் விடுவார்கள். முற்றுகையை நிறுத்தி, குறைஷிகள் மக்காவுக்குத் திரும்பிப் போய் விட்டால், பிறகு நீங்கள் தனியாக முஸ்லிம்களை எதிர்த்து நிற்க இயலுமா? நீங்களும், முஸ்லிம்களும் ஒரே பகுதியில்