பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154



அதுவும் தவிர, நீங்கள் உங்களுடைய தலைவர்களில் சிலரை எங்களிடம் பிணையாக ஒப்புவித்தால் ஒழிய, நாங்கள் சண்டை செய்ய முடியாது. ஏனெனில் நாங்கள் தனியாக நின்று, சண்டை செய்யுமாறு எங்களை விட்டு விட்டு, நீங்கள் உங்கள் நாட்டுக்கு ஓடிப் போய் விடுவீர்களோ என்று சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது” என்று கூறினார்கள்.

அவர்கள் அவ்வாறு கூறியதும், குறைஷிகளும், கத்பான் கூட்டத்தாரும் நயீம் வந்து, தங்களிடம் கூறியவை அனைத்தும் உண்மையே என உறுதிப்படுத்திக் கொண்டனர்.

பின்னர், அவர்களிடம், “எங்கள் தலைவர்களில் யாரையும் உங்களிடம் நாங்கள் பிணையாக ஒப்புவிக்க இயலாது. ஆனால், அவசியம் சண்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், நாளையே நடத்தி விடுவோம்” என்றனர் குறைஷிகள்.

“ளங்களுக்குத் திருப்தி ஏற்படாத வரையில், நாங்கள் உங்களுடன் சேர்ந்து சண்டை செய்ய முடியாது” என்று கூறிவிட்டனர் புனூ குறைலா கூட்டத்தினர்.

இதிலிருந்து அவர்களுக்குள் பிளவு உண்டாக்கி விட்டது.


116. எதிரிகள் வந்த வழியே சென்றனர்

அபூ ஸுப்யான், குறைஷிகளை எல்லாம் அழைத்து:

“நம்முடைய நாட்டை விட்டு நாம் அனைவரும் இங்கு வந்து, கஷ்ட நிலையில் இருக்கிறோம். நம்முடைய படைகளும், ஒட்டகங்களும், குதிரைகளும் நலிவடைந்து கொண்டிருக்கின்றன. தவிர. புயலின் கோரத்தால் நாம் அடுப்புப் பற்ற வைக்கவும், நம்முடைய உணவைத் தயாரித்துக் கொள்ளவும் முடியவில்லை. இந்த நிலைமையில் நாம் இங்கு தாமதிப்பது சரியல்ல” என்று கூறி, ஒட்டகத்தில் ஏறி அவர் புறப்பட்டு விட்டார்.

அதன் பின்னர், குறைஷிகள் எல்லோரும் அவரைப் பின் தொடர்ந்து போய் விட்டார்கள்.