பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174



ஹூதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு, அவர்களுக்குள் போக்குவரவு உண்டாயிற்று. வியாபாரத் தொடர்புக்காகவும், குடும்ப சம்பந்தமாகவும் காபிர்கள் அடிக்கடி மதீனாவுக்கு வந்தார்கள்; அங்கே சில காலம் தங்கினார்கள். அப்பொழுது அவர்கள் முஸ்லிம்களுடன் நெருங்கிப் பழகி வந்தார்கள்; அதனால், இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்து கொண்டார்கள். பெருமானார் அவர்களின் மேன்மையும், எளிமையும், நற்செய்கைகளும் சிறப்பாகக் கண் முன் காணும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டாயிற்று. இவை யாவும் குறைஷிகளின் உள்ளத்தில் பசுமையாகப் பதிந்து, ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கிற்று.

இஸ்லாத்தின் கொள்கைகள் குறைஷிகளை ஈர்த்தன. கூட்டம் கூட்டமாக அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

இவ்வளவு அதிகமான பேர் இதற்கு முன் ஒரு பொழுதும் வந்து சேரவில்லை,

குறைஷிகளில் பிரபலமான வீரரும், உஹத் சண்டையின் போது, முஸ்லிம்கள் அதிக இழப்புக்கு முக்கிய காரணமாயிருந்தவர்களுமான காலித் இப்னு வலிது, அம்ருப்னுல் ஆஸ் ஆகியோர் இக்காலத்தில் இஸ்லாத்தில் சேர்ந்தார்கள்.


131. ஆண்டவன் வழி காட்டுவான்

எனினும், உடன்படிக்கையின்படி, மக்காவிலே தங்கியிருந்த முஸ்லிம்களைக் குறைஷிகள் கொடுமைப்படுத்தி துன்பத்துக்கு ஆளாக்கினார்கள்.

அந்தத் துன்பத்திலிருந்து தப்புவதற்காகப் பலர், மதீனாவுக்கு வரத் தொடங்கினார்கள். அவ்வாறு முதன்முதலில் வந்தவர் உத்பதுப்னு உஸைது என்னும் அபூபஸீர் ஆவார்.

அவர் மதீனாவுக்குப் போய் விட்ட செய்தியை அறிந்த குறைஷிகள் அவரைத் திரும்ப அழைத்து வருவதற்காக, இருவரைப் பெருமானார் அவர்களிடம் அனுப்பினார்கள்.