பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208



அவர்களைப் பார்த்து, “நண்பர்களே, உறவினர்களே! நான் இஸ்லாத்தில் சோந்து விட்டேன். நம்முடைய பொய்யான கொள்கையினால், நமக்கு ஏற்பட்ட தீமைகளை எல்லாம் நீங்கள் நன்கு அறிவீர்கள், இப்போது அனைவரும் சீராக வாழ வேண்டும். மறுமையில், நற்பதவி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் பல தெய்வ வணக்கத்தைக் கைவிட்டு, ஒரே ஆண்டவனுடைய வணக்கத்தைக் கடைப்பிடியுங்கள். ஆர்வத்தோடு திரண்டு வரும் முஸ்லிம் சேனையை, நம்மால் தடுத்த நிறுத்த இயலாது. அதைத் தடுக்க நாம் முயல்வது நம்மை நாமே நாசமாக்கிக் கொள்ள வழி தேடியதாகும். அதன் மூலம் மக்காவில் இரத்த வெள்ளம் ஒடும். என்னுடைய வீரமும், தைரியமும் நீங்கள் நன்கு அறிந்ததே. அத்தகையவனான நானே மாறிவிட்டேன்.” என்று கூறி விட்டு, பெருமானார் அவர்கள் அளித்த பாதுகாப்புச் சலுகையையும் தெரிவித்தார்:

இவ்வாறு அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவருடைய மனைவி ஓடி வந்து, அவருடைய தாடியைப் பிடித்திழுத்து, அவரை அவமதித்து, "காலிப் வம்சத்தாரே, உங்களுடைய ரோஷம் எங்கே போயிற்று? இந்தக் கிழட்டு மனிதரை அடித்துக் கொல்லுங்கள். இவர் ஏதோ உளறிக் கொட்டுகிறார்” என்றார்.

“இந்த முரட்டுப் பெண்ணுடைய சொற்களை நம்பி, நீங்கள் மோசம் போகாதீர்கள். இப்பொழுது யோசிப்பதில் பயனில்லை. மிகப் பெரிய சேனை அருகில் வந்து விட்டது. அதைத் தடுத்து நிறுத்த உங்களால் இயலாது.” என்றார் அபூ ஸுப்யான்.

அந்த மக்கள் அனைவரும் ஓடி அவரவர் வீட்டுக்குள் புகுந்து கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள்.


157. முஸ்லிம் படை மக்கா வருகை

முஸ்லிம் சேனையானது மக்காவை நெருங்கி விட்டது.

அந்தப் புனித நகரம் முஸ்லிம்களின் பார்வைக்கு நன்றாகத் தெரிந்தது.

முஸ்லிம்களை எதிர்ப்பதற்கு அங்கே படை எதுவும் காணப்படவில்லை.