பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228



மதீனாவைத் தாக்குவதற்காக, ரோமாபுரி அரசு, ஷாம் மாகாணத்தில் படையைப் பெருக்கிக் கொண்டிருந்தது. அந்தப் படையில் கஸ்ஸான் கூட்டத்தாரும், வேறு சில கூட்டத்தாரும் சேர்ந்திருந்தனர். சேனைகளுக்கு ஒரு வருடச் சம்பளம் முன்னதாகவே கொடுத்து விட்டனர். முதல் அணி பல்கா என்னும் இடத்துக்கு வந்து விட்டது. இத்தகவலை ஷாம் மாகாணத்திலிருந்து வந்த ஸைத்தூன் எண்ணெய் வியாபாரிகள் மதீனாவில் விளம்பரப் படுத்தினார்கள்.


176. தாக்குதலைத் தகர்க்க முன்னேற்பாடு

பெருமானார் அவர்களுக்குத் தகவல் தெரிந்தது. மதீனாவைப் பகைவர் வந்து தாக்குவதற்கு முன்னதாகவே தாங்கள் சென்று அவர்களை முறியடித்து விட வேண்டும் என்று பெருமானார் கருதினார்கள்.

சேனைகளைத் தயார் செய்யும்படி உத்தரவிட்டார்கள்.

போருக்குப் பண உதவியும், ஆள் உதவியும் செய்யும்படி சுற்றுப்புறத்திலுள்ள அரபிக் கூட்டத்தாருக்கு எல்லாம் பெருமானார் அவர்கள் செய்தி அனுப்பினார்கள்.

அந்த வருடத்தில், அரேபியாவில் கடுமையான பஞ்சம். வெப்ப நிலையும் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

வெளிப்பார்வைக்கு முஸ்லிம்களாகவும், அந்தரங்கத்தில் இஸ்லாத்தின் மீது கொஞ்சம்கூட பற்று இல்லாதவர்களாகவும் இருந்த முனாபிக்குகள் என்னும் நயவஞ்சகர்கள், யுத்தத்துக்கு மக்கள் போகாதிருக்க முயற்சி செய்தனர்.

முனாபிக்குகள் அவ்வாறு முயன்றபோது, உண்கையான முஸ்லிம்களுக்கு ஊக்கம் அதிகரித்தது.