பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

235



183. உற்சாகத்தால் உண்மையைக் கூறினார்!

மக்காவிலிருந்து ஷாம் தேசத்துக்குச் செல்லும் ஒரு பகுதியில் கிபாரீ கோத்திரத்தார் வசித்து வந்தனர். அக்கூட்டத்தில், முக்கியமானவர் அபூ தர் கிபாரீ என்பவர். அவர் அக்காலை பெருமானாரைப் பற்றிப் பொய்யான வதந்திகளைக் கேள்வியுற்றிருக்கிறார். அதனால் உண்மையை அறிவதற்காக, அவர் மக்காவுக்கு வந்திருக்கிறார்.

அந்தச் சமயம், முஸ்லிம்களுக்குச் சோதனையான நேரம். அதாவது, இஸ்லாத்தில் சேர்ந்தவர்களைக் குறைஷிகள் துன்புறுத்திக் கொண்டிருந்தனர். அதுவரை இஸ்லாத்தில் சேர்ந்திருந்தோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

அபூ தர், பெருமானார் அவர்கள் முன்னிலையில் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுதே அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அவர் இஸ்லாத்தில் சேர்ந்த செய்தியை அச்சமயம் வெளியிட வேண்டாம் என்று பெருமானார் அவரிடம் சொன்னார்கள். ஆனால், அவருக்கு இஸ்லாத்தின் மீதுள்ள பற்றை மறைக்க முடியவில்லை. அவர் உடனே கஃபாவில் போய் நின்று கொண்டு. “நான் முஸ்லிம் ஆகிவிட்டேன்” என உற்சாகத்தோடு பகிரங்கமாக அறிவித்தார். அதை அறிந்த குறைஷிகள், அவரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தினார்கள். அப்பொழுது அப்பாஸ் அவர்கள் வந்து அவரை விடுவித்தார்கள்.

அதன்பின், அபூ தர் தம்முடைய நாட்டுக்குச் சென்று இஸ்லாத்தைப் பரப்பினார். அவருடைய முயற்சியினால் அப்பொழுது பலர் முஸ்லிம் ஆகி இருந்தார்கள்.


184. எதிர்ப்புகள் அடங்கின; வளர்ச்சி பெருகிற்று

அரேபியா நாட்டில், குறைஷிகள் சிறப்பாக இருந்த ஒரு காலத்தில், அவர்கள் இஸ்லாத்தைத் தழுவவில்லை. அவர்களுடைய