பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

249



முஸ்லிம் படை ஏமனுக்கு அருகில் வருவதை அறிந்ததும் ஹாத்திம் மகன் அதி பயந்து ஷாம் தேசத்துக்கு ஓடிவிட்டார்.

ஹலரத் அலி அக்கூட்டத்தாரை எளிதில் வெற்றி கொண்டார்கள். அவர்களுடைய பொருள்களைக் கைப்பற்றி பலரைச் சிறைப் படுத்தினார்கள். சிறைப்பட்டவர்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்தி மதீனாவுக்குக் கொண்டு வந்தார்கள்.

சிறைப்பட்டவர்களில் ஹாத்திமுடைய மகளும், அதியின் சகோதரியுமான ஸஃப்பானாவும் ஒருவர்.

ஸஃப்பானா பெருமானார் அவர்களைக் கண்டதும், "ஆண்டவனுடைய தூதரே, என்னுடைய தந்தையோ காலமாகி விட்டார். இப்பொழுது எனக்குத் துணையான ஒரே சகோதரனும் முஸ்லிம் படை வருவதை அறிந்து, அஞ்சி ஓடி விட்டான். ஆகையால், என்னை மீட்பதற்கு யாருமே இல்லை. என்னை விடுதலை செய்வதற்காக உங்களுடைய கருணை உள்ளத்திடம் நான் ஆதரவு தேடுகிறேன். என் தந்தையோ புகழ் மிக்கவர்; எங்கள் கூட்டத்தாரில் அரசருக்குச் சமமானவராக அவர் வாழ்ந்தார். சிறை பட்டவர்கள் எத்தனையோ பேரைப் பணம் கொடுத்து என் தந்தை மீட்டிருக்கிறார். பெண்களின் கெளரவத்தைப் பாதுகாத்திருக்கிறார். ஏழைகளை ஆதரித்திருக்கிறார். துன்பத்தில் தோய்ந்தவர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறார். தம்மிடம் வந்து கேட்டவர்களுக்கு இல்லை என்று அவர் சொன்னதே கிடையாது; நான் அத்தகைய ஹாத்திமின் மகள்” என்றாள்.

பெருமானார் அவர்கள் ஸஃப்பானாவிடம், “ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள் யாவும் உன்னுடைய தந்தையிடம் இருந்தன. விக்கிரக வணக்கத்தில் காலம் கழித்த ஒருவரின் ஆத்மாவின் மீது, இரக்கம் காட்டுமாறு ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு எனக்கு அனுமதி இருந்தால், ஹாத்திமுடைய ஆத்மாவிடம் கருணை காட்டும்படி நான் ஆண்டவனிடம் பிரார்த்திப்பேன்” என்று கூறிவிட்டு, சுற்றிலுமுள்ள முஸ்லிம்களை நோக்கி, “ஹாத்திமுடைய மகள் சுதந்திரமாகி விட்டாள். அவருடைய தந்தை தயாள சிந்தையும், இரக்கமும் உள்ளவர். ஆண்டவன்

18