பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258



200. முடிவை உணர்தல்

பெருமானார் அவர்கள் தொழுகையை முடித்து, நிகழ்த்திய இறுதிச் சொற்பொழிவில், “இவ்வுலக பாக்கியங்களையோ, அல்லது மறுமையில் ஆண்டவனிடத்தில் உள்ளவற்றையோ, இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படியான அதிகாரத்தை ஆண்டவன் ஓர் அடியவனுக்குக் கொடுத்தான். அவ்வடியவனோ ஆண்டவனிடத்தில் உள்ளவற்றையே ஒப்புக் கொண்டான்” என்று கூறினார்கள்.

அந்தச் சொற்களைக் கேட்டவுடன் அபூபக்கர் அவர்களின் கண்களில் நீர் மல்கியது. உள்ளத்தில் வருத்தம் மேலிட்டது.

அருகில் இருந்தவர்கள், “வேறு ஒருவரைப் பற்றிக் கூறும்போது அபூபக்கர் அவர்கள் ஏன் வருந்த வேண்டும்?” என்று வியப்போடு அவர்களைப் பார்த்தார்கள்.

பெருமானார் அவர்கள், தங்கள் மரணத்தைப் பற்றியே அச்சொற்களைச் சொன்னார்கள் என்று அபூபக்கர் அவர்கள் உணர்ந்ததாலேயே, அவ்வாறு அவர்களுக்கு வருத்தம் மேலிட்டது.

அதன்பின், பெருமானார் அவர்கள், “யாருடைய செல்வத்துக்கும் தோழமைக்கும் நான் அதிகமாக நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றால், அபூபக்கர் அவர்களுடைய செல்வத்துக்கும் தோழமைக்குமே ஆகும்.

“உலகில் என்னைப் பின்பற்றியவர்களில், யாரையாவது என்னுடைய முதன்மைத் தோழராக்கிக் கொள்ள வேண்டுமானால், நான் அபூபக்கரையே அவ்வாறு ஆக்கிக் கொள்வேன்.

“பள்ளிவாசலுக்கு வரும் வாயில்களில் அபூபக்கர் அவர்கள் வரும் வாயிலைத் தவிர மற்றவற்றை எல்லாம் மூடி விடுங்கள். ஆம், முன்பு இருந்த கூட்டத்தார் தங்களுடைய நபிமார்கள், பெரியோர்களின் அடக்கத் தலங்களையே வணக்கத் தலங்களாக்கி விட்டார்கள். நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது. நான் அதை விலக்குகின்றேன்” என்றார்கள்.