பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11



ஸுராக்கா-முழுப்பெயர் ஸுராக்கா இப்னு மாலிக். பெருமானார் அவர்களும், அபூபக்கரும் மக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்ற போது, பரிசு பெறுவதற்காக அவர்களைத் தேடிச் சென்றவர் இவர். ஹுனைன் போருக்குப் பின்னர் இஸ்லாத்தைத் தழுவினார்.

ஸுபைர் இப்னு அவ்வாம்-இவர் கதீஜா(ரலி) அவர்களின் சகோதரர். அவ்வாமுக்கும் ஸ்பிய்யாவுக்கும் மகனாவார். பல போர்களில் கலந்து கொண்டு வீரப் போர் புரிந்தவர். அபூபக்கர் (ரலி) அவர்களின் மகளார் அஸ்மாவைத் திருமணம் செய்தவர்.

ஸுபைர்-கதிஜாப் பிராட்டியாரின் சகோதரர் மகன். இவர், இருவரை அழைத்துக் கொண்டு கஃபாவுக்குச் சென்று, பகிஷ்கார அறிவிப்பைக் கிழித்தெறிந்து விட்டுப் பெருமானார் முதலானவர்களைப் பள்ளத்தாக்கிலிருந்து மீட்டு வந்தார்.

சுஹைல் இப்னு அம்ரு-இவர் குறைஷித் தலைவர்களில் ஒரு அறிவாளி. பத்ருப் போரில் கலந்து கொண்டு சிறை பிடிக்கப்பட்டு, இழப்புத் தொகை கொடுத்து மீண்டவர். பின்னர், பெருமானார் அவர்களிடம் ஹுதைபிய்யாவில் உடன்படிக்கை செய்து கொள்வதற்காக குறைஷிகளின் சார்பாக வந்த தூதர். பிறகு இவர் இஸ்லாத்தைத் தழுவினார்.

ஸௌதா பின்த் ஸம்ஆ-இவரும், இவர் கணவரும் முஸ்லிமாகி, அபிசீனியா சென்றனர். அங்கே கணவர் இறந்து விட்டார். இவருடைய திக்கற்ற விதவை நிலையைக் கண்டு, பெருமானார் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

தல்ஹா-குறைஷிகள் அணியில் உஹத் சண்டையில் கொடி பிடித்தவர். அவர் சவால் விட்டதன் காரணமாக, அலியின் வாளுக்கு இரையானார்.

துபைல் இப்னு அம்ர்-மக்காவின் சுற்றுப்புறத்தில் வாழ்ந்து வந்தவர். இவர் மக்காவுக்கு வந்த போது பெருமானார் அவர்கள் ஒதித் தொழுததைக் கேட்டு, உணர்ச்சி மேலிட்டு முஸ்லிமானார்.