பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34



21. ஆண்டவன் கைவிட மாட்டான்!

ஹிரா குகையிலிருந்து பெருமானார் உடல் நடுநடுங்க வீட்டுக்கு வந்து, போர்த்தியவாறு படுத்து விட்டார்கள்.

மனம் சிறிது அமைதியானதும் பெருமானார் அவர்கள், நிகழ்ந்தவை அனைத்தையும் கதீஜாப் பிராட்டியாரிடம் அறிவித்தார்கள்.

அவர்கள் கூறிய விவரத்தைக் கேட்ட கதீஜாப் பிராட்டியார்,"மகிழ்ச்சியோடு இருங்கள்: ஆண்டவன் உங்களை ஒரு பொழுதும் கைவிட மாட்டான். நீங்கள் கருணை உள்ளவர்கள். உண்மையே பேசுபவர்கள். ஏழைகளுக்கு உதவுபவர்கள். உறவினர்களையும், நண்பர்களையும் அன்போடு உபசரிக்கிறவர்கள். நற்காரியங்களுக்குத் துணையாக இருப்பவர்கள். நீங்கள் நபி தீர்க்கதரிசியாவீர்கள் என்பதற்கு-கதீஜாவின் உயிரானது யார் வசம் இருக்கிறதோ அவனே எனக்குச் சாட்சியாக இருக்கிறான்” என்று கூறினார்கள்.

மறு நாள் நாயகியார் அவர்கள், தம் சிறிய தந்தையின் மகன் ‘வரக்கா இப்னு நெளஃபல்’ என்பவரிடம் சென்று நடந்த வரலாற்றைக் கூறினர்.

அவர், யூதர்கள், கிறிஸ்துவர்களின் வேத நூல்களை நன்கு ஆராய்ந்து அறிந்தவர். அவர், கதீஜா நாயகியார் கூறியவற்றைக் கேட்டதும்,"புனிதமானது! புனிதமானது! மூஸா நபி அவர்களிடம் வெளியான வானவரும் இவரே! அவர் (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இந்த மக்களுக்கு நபியாயிருப்பார். அவரிடம் இதைக்கூறி, தைரியமாயிருக்கும்படிச் சொல்லுங்கள்” என்றார்.


22. தீர்க்கதரிசி தோன்றினார்கள்

வரக்கா வேதங்களை ஆராய்ச்சி செய்ததில், அண்மையில், அரேபியாவில் தீர்க்கதரிசி ஒருவர் தோன்றுவார் என்பது தெரிந்து, அவர் அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.