பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35



அவர் பெருமானார் அவர்களைச் சந்தித்த போது:

“வரக்காவின் உயிரானது, யாருடைய கையில் இருக்கிறதோ அவன் பேரில் சத்தியமாகச் சொல்லுகிறேன். ஆண்டவன், இந்த மக்களுக்கு உம்மை நபியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான். தெய்வீகச் செய்திகளை அறிவிக்கக் கூடிய தூதர் உம்மிடம் வந்திருக்கிறார். இந்த மக்கள் உம்மைப் பொய்யன் என்று சொல்வார்கள். உமக்கு இன்னல் விளைவிப்பார்கள். நாட்டை விட்டுத் துரத்துவார்கள். உமக்கு விரோதமாகச் சண்டை செய்வார்கள். அவ்வாறு நடைபெறக் கூடிய நாளில் நான் உயிரோடு இருப்பேனாகில், உமக்காக ஆண்டவன் பாதையில் உதவி செய்வேன். நான் அவ்வாறு செய்பவன் என்பதை ஆண்டவன் அறிவான்!” எனக் கூறினார்.


23. எவ்வித இடையூறும் நேரிடாது!

பெருமானார் அவர்கள் ஆண்டவனுடைய தூதர் என்பதை முதன் முதலாக ஒப்புக்கொண்டவர்கள் கதீஜா நாயகியார்தாம்! ஆண்டவன் கட்டளைகளில் விசுவாசம் கொண்டு, விக்கிரக வணக்கத்தைக் கைவிட்டு, ஒரே ஆண்டவனுடைய வணக்கத்தில் பெருமானார் அவர்களுடன் முதன்முதலில் சேர்ந்தவரும் அவர்களே!

நபி பெருமானார், தங்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்திகளை ஆரம்பத்தில், மிகவும் நெருங்கிப் பழகியவர்களிடம் மட்டுமே அறிவித்தார்கள்.

பெருமானார் அவர்கள் தீர்க்கதரிசி என்பதை முதன்முதலில் ஏற்றுக்கொண்ட இருவர் கதீஜா நாயகியாரும், அதன்பின், பெருமானாரின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் குமாரரான பத்து வயதுள்ள அலி அவர்களும் ஆவார்கள்.

பெருமானார் அவர்கள் கதீஜா நாயகியாருடனும், அலி அவர்களுடனும் தொழுவார்கள்.

இவ்வாறு, அவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் போது, அபூதாலிப் தற்செயலாக அங்கே வந்துவிட்டனர்.