பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42



பெருமானார் அவர்கள் அவற்றைக் கண்டு கலங்காமல், தளராமல், ஆண்டவனிடம் முழு நம்பிக்கை கொண்டு தங்களுடைய புனிதத் தொண்டை செவ்வனே செய்து வந்தார்கள்.

பெருமானார் அவர்களின் உறுதியைக் கண்டு குறைஷிகள் வியப்புற்றார்கள். ஆயினும், அவர்களுடைய நோக்கம் என்ன என்பது அந்த மக்களுக்குப் புலப்படவில்லை.

“உலக ஆசையே இதற்குக் காரணமாக இருக்குமோ?” எனச் சந்தேகித்து, குறைஷி சமூகத்துப் பிரமுகர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசித்து, உத்பா என்னும் தூதர் ஒருவரைப் பெருமானார் அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.

தூதர் உத்பா சென்று, பெருமானார் அவர்களைக் கண்டார்.

“அருமைச் சகோதரர் புதல்வரே! தாங்கள் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள். நம்மவர்களிலேயே மிகுந்த கெளரவம் உடையவர்கள். அத்தகைய நீங்கள் நம்முடைய விக்கிரக வணக்கத்தை எதிர்த்தும், தேவதைகளை இகழ்ந்தும், தடுத்தும் வருவது உங்களிடம் வருத்தத்தை உண்டாக்கி, வெறுப்படையச் செய்கிறது. அவ்வாறு நீங்கள் ஈடுபடுவதன் நோக்கம்தான் என்ன? மிகுந்த செல்வத்தைப் பெற்று, செல்வச் சீமானாக வேண்டும் என்ற ஆசை இருக்குமானால் சொல்லுங்கள். ஏராளமான செல்வத்தைச் சேகரித்துத் தந்து, பெரிய சீமானாகச் செய்கிறோம். அல்லது,

எங்களுக்குத் தலைமை வகிக்க வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருந்தால் கூறுங்கள். எங்களுக்கு மட்டும் அல்லாமல் அரேபியா தேசம் முழுவதற்குமே உங்களை அரசராக ஆக்கி விடுகிறோம். இல்லை,

அழகு மிக்க மங்கையை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்குமானால் தெரிவியுங்கள். அழகு மிக்க பெண்ணை உங்களுக்குத் தருகிறோம்.

இம்மூன்றையும் நீங்கள் விரும்பவில்லையானால், உங்களிடத்தில் ஏதோ மனக்கோளாறு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். அவ்வாறானால், அதற்கும் எங்களுடைய செலவிலேயே சிகிச்சை செய்வதற்கும் தயாராக இருக்கிறோம்” என்றார்.