பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76



பெருமானார் அவர்களைப் பாதுகாக்கும் பெருமை, மதீனாவில் வாழும் அன்ஸாரிகளுக்கு ஆண்டவன் ஏற்படுத்தியிருக்கும் போது, அவர்கள் வேறு எங்கே போக முடியும்?

நபிப் பட்டம் கிடைத்த பதின்மூன்றாவது ஆண்டுத் தொடக்கத்தில், பெருமானார் அவர்களை மதீனாவுக்குப் புறப்பட்டுச் செல்லும்படி ஆண்டவனிடமிருந்து உத்தரவு கிடைத்தது.

உடனே அவர்கள், அபூபக்கர் அவர்களிடம் சென்று, ஆண்டவன் உத்தரவைக் கூறினார்கள்.

“நானும் தங்களைத் தொடர்ந்து வரும் பாக்கியத்தைப் பெறுவேனா?” என்று கேட்டார்கள். பெருமானார் அவர்களும் அதற்கு இசைந்தார்கள்.


56. மக்காவை விட்டுப் பிரிதல்

பகைவர்கள் உருவிய வாள்களோடு பெருமானார் அவர்களை எதிர்பார்த்துச் சூழ்ந்திருக்கின்றனர்.

அத்தகைய வேளையிலுங் கூட, பெருமானார் அவர்கள் உயிரைக் காட்டிலும் நம்பிக்கையைக் காப்பாற்றுவதையே பெரிதாகக் கருதினார்கள்.

அலி அவர்களை அழைத்து வரச் செய்து, “ மக்காவை விட்டுப் புறப்பட்டுச் செல்லும்படி எனக்கு உத்தரவு கிடைத்திருக்கிறது. என்னுடைய கட்டிலில் என்னுடைய போர்வையைப் போர்த்துக் கொண்டு நீர் படுத்துக் கொள்ளும், காலையில் எழுந்து என்னிடம் நம்பிக்கையாகக் கொடுக்கப்பட்டிருந்த பொருள்களை, அவற்றிற்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நீர் மதீனாவுக்கு வந்து சேரும்” என்று கூறினார்கள்.

அதன்பின் பெருமானார் அவர்கள் வெளியே வந்து, கஃபாவைப் பார்த்து, “மக்காவே! உலகிலுள்ள அனைத்திலும் நீ எனக்கு மேன்மையாக இருக்கிறாய். ஆனால் உன்னுடைய மக்களோ, என்னை இங்கே இருக்கவிடவில்லை” என்று கூறிவிட்டு, அபூபக்கர் அவர்கள்