பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அவரால் மாட்டைப் பார்த்துக் கொள்ள முடியுமா? பால்காரனையே முழுதாக நம்பினார். பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அவனே மாட்டுக்குப் பொறுப்பாளியானான். அவன் செலவு என்று சொன்னது தான் கணக்கு. லாபம் என்று தந்தது தான் வரவு. ‘சைட் பிசினஸ்’ என்பார்களே. அப்படி நடந்து வந்தது.

அக்கம் பக்கம் உள்ளவர்களிடம், மாடு அவனுடையது என்று சொல்லிக் கொண்டே வந்த பால்காரன், ஒரு நாள் மாட்டை ஓட்டிக் கொண்டு புறப்பட்டுவிட்டான்.

பதட்டப்பட்ட ஆசிரியர், மாடு தன்னுடையது என்று தடுத்தார். அவன் மறுத்தான். மற்றவர்களும் அவர் பேச்சை நம்ப மறுத்தார்கள். மாடு பால்காரன் மாடாகப் போயே விட்டது.

வருத்தப்பட்டார் ஆசிரியர். தனது நண்பர்களிடம் கூறினார். அவர்கள் கூறியது அவருக்கு வருத்தமாக இருந்தாலும், உண்மையாகவே பட்டது.

‘உங்களுக்குத் தெரிந்த தொழிலை, உங்கள் கெளரவத்திற்கு ஏற்ற தொழிலைச்செய்திருந்தால். இந்த கதி வருமா?’ உண்மைதானே! இரண்டாயிரத்தை இழந்து அந்த உண்மையை உணர்ந்தார். அத்துடன், படித்த முட்டாள் என்ற பட்டத்தையும் பக்கத்து வீட்டார் வழங்க, பெற்றுக் கொண்டார்.