பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


“பிறர் கையை எதிர்பார்த்துப் பிழைப்பது பேதையின் செயலாகும்! பிறரை நம்புவதே இறுதியில் வறுமையில் கொண்டு போய் விட்டுவிடும்” என்பதையும் நாம் மறக்கக் கூடாது.

ஆகவே, தொழிலை எப்படித் தேர்ந்தெடுப்பது?

அறிவுள்ள மனிதன் ஒருவன் தனக்குரியதைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, தன்னை ஒரு முறை பார்த்துக் கொள்ள வேண்டும். தனக்குரிய தகுதிகளையும், திறமைகளையும், ஒருவாறு சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதிக எச்சரிக்கையுடன் இருந்து தேர்ந்தெடுக்க முயற்சிப்பது அதிக அறிவுடமையைக் குறிக்காது. அதனால், நமது உண்மை நிலையை உறுதிப்படுத்திக் கொள்வது சாலச் சிறந்ததாகும்.

இதயம் மிகச் சிறியதுதான். ஆனால் அதனுள் இருந்து வெளிக் கிளம்பும் நினைவுகளோ வான வீதியையும் வளைத்துப் பிடித்து முற்றுகையிட்டு, மோதிச் சாய்க்கும் வலிமை உடையது.

ஆகவே, ஆசைப்படுவனவற்றையெல்லாம் நாம் ஆக்ரமித்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது.

வாழ்க்கையைப் பிரச்சினையாகவும் கருதிவிடக் கூடாது.