பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அதைவிட்டுவிட்டு, தன்னம்பிக்கை இல்லாமல், ஒரு முடிவெடுக்கத் தெரியாமல், செக்கு மாடாகச் சுற்றிச் சுற்றி வருவது, ஆறறிவுடைய மனிதர்க்கு அழகல்லவே!

“நீ என்ன செய்யப் பேகிறாய்? நீ என்ன செய்வாய்?” என்ற சாதாரண கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்துப் போய் தடுமாறி நின்று பேதலித்து நிற்பவன், ஒரு அவமானச் சின்னமாகத்தான் அடுத்தவர்களுக்குத் தெரிவானே தவிர, வேறெப்படித் தெரிவான்?

'நான் என்ன செய்ய வேண்டும். நான் என்ன செய்யக் கூடாது' என்று முடிவெடுக்கும் ஆற்றல் உள்ள மனிதன்தான் செயற்கரிய செயல்களைச் செய்பவனாகத் திகழ்கிறான்.

எதற்கும் முடிவுதான் முக்கியம். ஆரம்பிக்கிறவன், அதற்குரிய முடிவினை ஏற்றுக் கொள்ளும் மனவலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எழுத்துப் பணியில் எனக்கு ஏற்பட்ட பிடிப்பினால், செய்கின்ற ஒரு உத்தியோகத்தைத் தொடர்வதா விடுவதா என்ற பிரச்சினை எழுந்தது. இரண்டாயிரம் ரூபாய் வருமானம் வருகின்ற பதவி அது. அதை விட்டால்தான், எழுத்தில் கவனம் செலுத்த முடியும்.

விடுவது என்று, முடிவு எடுத்தாகி விட்டது. வருமானம் அந்த அளவுக்கு வருமா? வராவிட்டால், என்ன ஆவது? ‘வசதி வசதி’ என்ற வாழ்க்கை வசதிவந்து குழப்பத் தொடங்கியது.