பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மனிதர்கள் அனைவருக்கும் ஆண்டவன் பல அரிய சக்திகளைத் தந்திருக்கிறான். ஆற்றல்களை, அறிவுபூர்வமான சிந்தனைகளைத் தந்திருக்கிறான்.

வெந்த சோறும், விரித்த படுக்கையும், வீணான பேச்சும் மட்டுமே போதும் என்பவர்கள் வீணாகிப் போன உயிர்ப்பிண்டங்கள். தலையிருந்தும் தள்ளாடுகின்ற முண்டங்கள்.

நமக்கு இறைவன் கொடுத்த திறமையிருக்கிறது. முயற்சித்துப் பார்ப்போம், என்று முனைபவர்களே மனிதர்கள்.

நம்மால் முடியும் என்ற செயலில் இறங்கி விடுபவர்கள் தான் ஆண்மையாளர்கள். ஆற்றல் நிறைந்தவர்கள்.

வெற்றி கிடைத்தால் கிடைக்கட்டும். காரியத்தில் ஈடுபட்டோம். கஷ்டப்பட்டோம். நமது கடமையை நிறைவேற்றி விட்டோம். இனிமேல் கவலையேயில்லை என்று எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்பவர்கள்தான் இலட்சியவாதிகள்.

எல்லோரும் இலட்சியவாதிகளாக ஆகிவிட முடியுமா? அது கஷ்டம் தான்.

ஆனால், எந்தக் காரியத்தை நினைத்தாலும். ‘நம்மால் முடியுமா? நிச்சயம் முடியாது’ என்று, நான்கு அடிகள் பின்னால் நடப்பது தான் மனிதர்க்கு அழகல்ல என்கிறேன்.