பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் வேண்டும். தினம் அதை நோக்கியே நமது பயணம் தொடர வேண்டும். நமது முழு பலத்தையும் முழு மனத்தையும் அதிலே ஈடுபடுத்திக் கொண்டு விட வேண்டும்.

பெரிய இலட்சியத்திற்காக முயன்று, தோற்றாலும் பரவாயில்லை, யானை பிடிக்கும் முயற்சியில் தோற்பது கேவலமில்லை. ஒரு நாயைக் கல்லால் அடித்து விரட்டுவது பெரிய கெளரவமான காரியமுமல்ல.

மனிதனை உயர்திணை என்பார்கள். அவனது சிந்தனையும் செயலும் உயர்ந்ததாகத் தான் இருக்க வேண்டும்.

நம்மிடையே வாழ்பவர்கள் பலர், தாங்களாகவே தங்கள் திறமைகளைக் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டு, குலைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தங்களுக்கு இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று ஓர் எல்லை கட்டிக் கொண்டு முடங்கிப் போகின்றார்கள்.

இவ்வாறு குறுகிய எல்லைக்குள்ளே கோட்டை கட்டிக் கொண்டு, சும்மா கிடக்க முயல்வது தான் மனிதர்களின் முன்னேற்றத்தின் தடைக் கல்லாக விளங்குகிறது.

ஒரு காரியத்தில் ஈடுபட்டுத் தோற்றுப் போவது வீரம். தாழ்ந்த மனப்பான்மை என்பது பாவம். தனக்கு எதுவுமே செய்ய முடியாது என்ற முடிவுக்கு வருவது மன்னிக்கப் படாத மாபெரும் குற்றமாகும்.