பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

59


1954ஆம் ஆண்டு வரை, ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் ஓடி முடிக்க முடியாது என்று உலகமே நினைத்து, ஒரு முடிவோடு இருந்தது. ஆனால், தன்னால் ஒடமுடியும் என்று நிரூபித்துக் காட்டினார் ரோகர் பானிஸ்டர் என்னும் வீரர்.

அவரைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் ஓடி முடித்தனர். இப்பொழுது 4 நிமிடங்களுக்குள்ளே நூறு தடவை ஓடி ஒரு உலக சாதனையையே செய்திருக்கிறார் ஜான் வாக்கர் என்பவர்.

மனித சக்திக்கு எல்லையே கிடையாது. 100 மீட்டர் தூரத்தை 12 வினாடிகளில் 1896ம் ஆண்டு ஓடினார்கள். இப்பொழுது 9.9 வினாடிகளில் ஓடி சாதிக்கிறார்கள். 6 அடி உயரம் தாண்டினால் மிக அற்புதம் என்றனர் அந்த நாட்களில், இப்பொழுது 7½ அடி உயரம் தாண்டி, இன்னும் உயரே மனிதனால் தாண்ட முடியும் என்று சாதித்துக் காட்டுகின்றனர்.

அறுபது அடி தூரம் இரும்புக் குண்டெறிந்தவரை பீமன், மகாபலசாலி என்று 1960ஆம் ஆண்டு வருணித்தார்கள். இன்று 75 அடி தூரம் எறிகின்றார்கள். அது எப்படி?

மனிதனால் விரைவாக ஓட முடியும், உயரமாகத் தாண்ட முடியும், அதிக தூரம் எறிய முடியும் என்பதை நிரூபிக்கத் தானே ஒலிம்பிக் பந்தயங்கள் தோற்றுவிக்கப்பட்டன.