வாழ்க்கை வரலாறு
43
நேருவின் வாழ்க்கையிலும் வசந்தம் வந்தது. அன்று தான் அவருக்கும் கமலாவுக்கும் திருமணம் நிகழ்ந்தது.
அவ்வருஷத்திய கோடை காலத்தை நேருவின் குடும்பத்தினர் காஷ்மீரில் கழித்தனர். குடும்பத்தினரைப் பசுமைப் பள்ளத்தாக்கில் தங்கியிருக்க விட்டுவிட்டு, நேரு உறவினர் ஒருவருடன் மலைப்பரப்பின் அழகுச் செல்வங்களை எல்லாம் கண்டு களிக்கக் கிளம்பினார். பல வாரங்கள் சுற்றித் திரிந்து மகிழ்ந்தார். மலை முகடுகளிடையேயும், குறுகிய தடங்களிலும், எழில் பதுங்கிக் கிடக்கும் பள்ளத் தாக்குகளிலும் அலைந்து களித்தார். இந்த அனுபவம் பற்றி அவர் அழகாக எழுதியிருக்கிறார்.
”உலகின் உச்சியாய் தனிமையில் குறுகியும் நீண்டும் கிடந்த பள்ளத்தாக்குகளில் திரியும் அனுபவம் எனக்கு அப்பொழுதுதான் முதன்முதலாகக் கிட்டியிருந்தது. திபெத் பீடபூமிக்கு இட்டுச் சென்ற பாதைகளில் நடந்தோம். ஸோஜி-லா கணவாயின் மேலே மிக உயரத்தில் நின்று, ஓர்புறம் வளமார்ந்த பசும்வெளிகள் பரந்து கிடப்பதையும், மறுபக்கம் வறண்ட கரடுமுரடான பாறைகள் நிற்பதையும் கண்டோம். இருபுறமும் சுவர்கள் போல் மலைப்பகுதிகள் ஓங்கி உயர்ந்து நிற்க, பனி மூடிய மலைமுகடுகள் ஓர் கோணத்திலே சதாகாட்சி அளித்து மிரள, சிறுசிறு பனிப் பாறைகள் எங்களைச் சந்திக்க வருவதுபோல் சறுக்கி வழுக்கி ஓடிவர, குறுகிய தடங்களின் வழியாக நாங்கள் உயரே, உயரே இன்னும் உயரமாகப் போய்க் கொண்டிருந்தோம். குளிர் காற்று உடலில் குத்தி எடுத்தது. ஆனால், பகல் வேளைகளில் கதிரொளி கதகதப்பாக இருந்தது. எங்கும்