பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40 நல்வழிச் சிறுகதைகள்

புல்வெளியிலே புலியிருப்பதில்லை. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று நீ கேள்விப்பட்டதில்லையா ? அப்படியே புலியிருந்தாலும் எருதண்ணாவின் கொம்பு அதன் குடலைக் கிழித்து விடாதா? எருதண்ணாவை நீ என்னவென்று. நினைத்துக் கொண்டாய்?’ என்று கேட்டது.

நரியின் பேச்சைக் கேட்ட எருதுக்குக் கிளியின் மேலே கோபம் கோபமாக வந்தது. தன் வீரத்தைப் பாராட்டிய நரியோடு பேசிக்கொண்டே அது புல்வெளியை நோக்கிச் சென்றது.

புல்வெளியில் அது இன்பமாக மேய்ந்து கொண்டிருந்தபோது நரி அங்கிருந்து நழுவியது; புல்வெளியில் ஒரு புறத்தில் மறைந்திருந்த கிழட்டுப் புலி எருதின் மேல் பாய்ந்து அதைக் கொன்று தின்றது. நரியும் அதன் குருதியைக் குடித்து மகிழ்ந்தது.

சாகும்போதுதான் எருதுக்கு அறிவு வந்தது. பச்சைக்கிளியின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், நரியின் நயவஞ்சகத்திற்கு இரையானதை எண்ணி வருந்தியது.

கருத்துரை:- வஞ்சகமில்லாதவர்கள் சொல்லும் கடுஞ் சொல்லும் நன்மையைத் தரும். வஞ்சகரின் இன்சொல்லோ துன்பத்தையே தரும்.