பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

நவகாளி யாத்திரை


தங்களுடைய வேகத்தைச் சரிக்கட்டுவதற்காகக் கொஞ்ச தூரம் ஒடியும், கொஞ்சதூரம் விரைவாக நடந்தும் சென்ற காட்சி மிகவும் வேடிக்கையாக இருந்தது!

மகாத்மாஜி நடந்து செல்லும் மார்க்கத்திலுள்ள வரப்புக்களையெல்லாம் நன்றாகச் செப்பனிட்டு அகலப்படுத்தி வைத்திருந்தனர். அங்கங்கே மூங்கில் பாலங்கள் உள்ள இடங்களில் தலைக்கு மேல் உயரமான வளைவுகள் கட்டி அவற்றை இளங்கொடிகளைக் கொண்டு ஜோடித்து வைத்திருந்தார்கள். சில வளைவுகளில், 'ஸ்வாகதம்', 'வெல்கம்', 'பாபுஜி! ஆயியே!' போன்ற வரவேற்பு வாசகங்களும் வேறு சில மணிமொழிகளும் எழுதி வைக்கப்பட்டிருந்தன.

நவகாளி ஜில்லாவின் இயற்கை அமைப்பு மகாத்மாவின் கிராம யாத்திரைக்கு மிகவும் ஒத்ததாயிருக்கிறது. தென்னை, மா, கமுகு முதலிய ஓங்கி வளர்ந்த விருட்சங்களடர்ந்த தோப்புகள் வழி நெடுக மண்டிக் கிடக்கின்றன. இதனால் எப்போதும், எந்த இடத்திலும் குளுமையான நிழல் மகாத்மாவைக் குதூகலத்துடன் வரவேற்கிறது. அந்தத் தோப்புக்குள்ளே ஒரு நீர்த்தேக்கமும், அதைச் சுற்றிச் சில வீடுகளும் காட்சி அளிக்கின்றன. நீர்த் தேக்கத்திலே நீந்தி விளையாடும் அன்னப் பட்சிகளும், தோப்புக்களிலே இனம் தெரியாத பற்பல பட்சி ஜாலங்களின் இன்னிசை கானமும் அப்படியே யாவரையும் வசீகரித்து விடுகின்றன. 

உபமேயப் பொருத்தம்

தர்மாபூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது வழி நடுவில் மகாத்மாஜியின் பிரயாணம் சிறிது நேரம்