பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

நவகாளி யாத்திரை


மகாத்மாஜி, "இம்மாதிரி ஒழுங்கான கூட்டத்தை என்னுடைய மதுரைப் பயணத்தில் நான் இரண்டொரு இடங்களில்தான் கண்டேன். இதைப்போல் நாற்பது கோடி மக்களும், ஒற்றுமையாகவும், சாந்தமாகவும் இருந்தால் மறுநாளே நமக்குச் சுதந்திரம் கிட்டிவிடும்" என்று கூறினார்.

பழநியில், பிரார்த்தனை மைதானத்தில் லட்சம் பேருக்கு மேல் கூடியிருந்தார்கள். அங்கே நிச்சப்தமாக இருந்து மகாத்மாவின் பிரசங்கத்தை அமைதியாகக் கேட்டுவிட்டுப் பிறகு மலையடிவாரத்துக்குப் போனார்கள். காரணம், அங்கே மகாத்மாஜி வரப் போகிறார், மலைமீது ஏறிப் பழநியாண்டவனைத் தரிசிக்கப் போகிறார், அப்போது காந்தி மகானைத் தரிசிக்கலாம் என்ற ஆசைதான்!

ஆனால், மகாத்மாஜியோ பழநிக் கோயிலுக்குப் போவதே சந்தேகமாயிருந்தது. எங்கே மதுரையைப் போல் பழநிக் கோயிலுக்குள்ளும் ஜனக்கூட்டம் கூடி ஆண்டவன் தரிசனத்துக்கு இடையூறு ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினால் முதலில் கோயிலுக்குப் போவதற்கே மறுத்துவிட்டார். கடைசியாகத் தக்கர் பாபா முன்கூட்டியே கோயிலுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்து, "தாங்கள் வரலாம்; கூட்டம் அதிகமில்லை; இருக்கிறவர்களும் ஒழுங்காக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்" என்று மகாத்மாஜிக்கு உறுதி கூறியதின் பேரிலேயே மகாத்மாஜி ஒப்புக் கொண்டார். பிறகு சரியாக எட்டு மணிக்கு மகாத்மாஜியும், ராஜாஜியும் பல்லக்கில் ஏறி மலைமீதுள்ள ஆண்டவன் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார்கள்.