பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

75


வரும் போது 'ஸ்பெஷ'லில் கடைசி வண்டியில் உட்கார்ந்துகொண்டிருந்த திருச்செங்கோடு திரு. ராமதுரை ரயில் கார்டுக்குப் பதிலாக, அவருடைய வேலையைத் தாமே செய்து கொண்டிருந்தார். அதாவது, சிவப்புக் கொடி, பச்சைக்கொடி காட்டுவதற்குப் பதிலாக மூவர்ணக் கதர்க் கொடியையே காட்டி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். ரயில் கார்டு திரு. வாசுதேவராவுக்கு இதனால் பாதி வேலை குறைந்து போயிற்று. ஆனாலும் திரு. வாசுதேவ ராவ், யாத்திரை முழுக்க எடுத்துக்கொண்ட சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. அடிக்கொரு தடவை ஒவ்வொரு வண்டியாக வந்து பார்த்துக் கொண்டே, "சாப்பிட்டீர்களா? தண்ணீர் வேண்டுமா? டிபன் வந்ததா?" என்று கேட்டு உபசரித்துக் கொண்டிருந்தார்.

சென்னைக்குத் திரும்பும் போது மகாத்மாஜி அங்கங்கே என்ன பேசினார் என்பது பற்றி நான் மெளனம் சாதிக்க விரும்புகிறேன். ஏனெனில், மகாத்மாஜி பழநியிலிருந்து சென்னைக்குத் திரும்பிய தினம் மெளன தினம் ஆகையால் அவர் ஒன்றுமே பேசவில்லை.

வரும் வழியில் ஆங்காங்கு கூடியிருந்த மாபெரும் ஜனக் கூட்டங்களைப்பற்றியும், மகாத்மாவுக்கு அவர்கள் அளித்த குதூகல வரவேற்புக்களைப் பற்றியுங் கூட மெளனம் சாதிக்க விரும்புகிறேன். ஏனெனில் எவ்வளவுதான் சொன்னாலும் அந்தக் குதூகல வரவேற்புக்களின் பெருமையில் நூற்றில் ஒரு பங்குகூடச் சொன்னதாகாது. அதைவிட மெளனம் சாதிப்பதே மேல் அல்லவா?