பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

நவகாளி யாத்திரை


காந்தி மகானின் மதுரை - பழநி யாத்திரையின்போது சுமார் 30 லட்சம் தமிழ் மக்கள் அவரைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தார்கள். ஹரிஜன நிதிக்காக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்தனர். மதுரையில் நடந்த பிரார்த்தனையின்போதும், மற்ற இடங்களிலும் அவருக்கு அளித்த கதர்ச் சிட்டங்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்துக்குக் குறைவில்லை.

மதுரைப் பிரார்த்தனை மைதானத்தில் கூடியிருந்த திரளான ஜனங்களைக் கண்டு மகாத்மா மலைத்துப் போனதோடு, அங்கே மலைபோல் குவிக்கப்பட்டிருந்த நூல் சிட்டங்களைக் கண்டு நிச்சயம் திகைத்துப் போயிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

மொத்தத்தில் தமிழக யாத்திரையானது மகாத்மாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும். "மதுரையில் கூடிய மாபெரும் கூட்டத்தைப்போல் மகாத்மாஜியே இதுவரை பார்த்தது இல்லை" என்று உடன் வந்த திரு. கமலநயன் பஜாஜ் கூறினார். இப்படிக் காந்தி மகானே கண்டு வியக்கத்தக்க முறையில் அவரை வரவேற்று வழியனுப்பிய தமிழ் மக்கள் அந்த நிகழ்ச்சியை என்றென்றும் எண்ணிப் பெருமிதம் கொள்ளலாம்.