பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

87


“மகாத்மாவிடம் தாங்கள் சென்னையிலிருந்து வந்திருப்பதாகக் கூறினேன்...“ என்றார்.

“அப்பாடா!“ என்று சிறிது சந்தோஷத்துடன் பெருமூச்சு விட்டேன்.

“தாங்கள் அவசியம் திரும்பிப் போய்விட வேண்டியதுதான் என்று காந்திஜி சொல்லிவிட்டார்“ என்று ஒரு பெரிய வெடிகுண்டைத் தூக்கி என் தலையிலே போட்டார்.

“ஐயா, ஒரே ஒரு நிமிடம், ஒரே ஒரு வார்த்தை. மகாத்மாவைப் பார்க்க அனுமதிக்க வேண்டும்“ என்று மிகவும் மன்றாடி வணக்கமாகக் கேட்டுக்கொண்டேன்.

திரு. நிர்மல்குமார் போஸ் மனமிரங்கினார்.

“ஒரே நிமிஷத்தில் திரும்பிவிட வேண்டும்“ என்ற கண்டிப்பான உத்தரவுடன் என்னை உள்ளே செல்ல அனுமதித்தார்.

கால்கள் தள்ளாடியவண்ணம் மகாத்மா வீற்றிருந்த கட்டிலுக்கருகில் போய் நின்றேன். நாக்குழறியது. வார்த்தைகள் வெளிவரவில்லை.