பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

குடிகொண்டிருந்த ஹிந்துக்கள் பலரின் உள்ளங்களிலும் துவேஷமென்னும் அக்கினி மூண்டது.

பஞ்சாப் சம்பவங்களுக்குப் பிறகு அந்த அக்கினி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியிருந்தது.

ஆனால், மகாத்மா காந்தியின் உறுதி மட்டும் எள்ளளவும் சலனமடையவில்லை.

நவகாளியில் முஸ்லிம்கள் உள்ளத்திலிருந்து பகைமைப் பேயை விரட்ட முயன்றது போலவே, கல்கத்தாவிலும், டெல்லியிலும் ஹிந்துக்களின் உள்ளத்திலிருந்தும் பகைமைப் பேயை ஓட்ட முயன்றார். கல்கத்தாவில் மகாத்மா விரைவிலேயே அதிசயமான வெற்றி பெற்றார். ஆனால், டெல்லியில் அவ்வளவு எளிதாக வெற்றி காண முடியவில்லை. உண்ணாவிரதம் இருந்து ஓரளவு வெற்றி கண்டார். உயிரைத் தியாகம் செய்து பூரண வெற்றி அடைந்தார்.

எவ்வளவோ கசப்படைந்து போயிருந்த ஹிந்து சமூகத்தின் உள்ளம் இவ் வருஷம் ஜனவரி 30-க்குப் பிறகு அடியோடு மாறிவிட்டது. வெறுப்பும், துவேஷமும், பழிவாங்கும் எண்ணமும் குடிகொண்டிருந்த ஹிந்து உள்ளங்களில் இப்போது பழையபடி அன்பும், சகோதர பாவமும் குடிகொண்டிருக்கின்றன.

மகாத்மா காந்தி தினந்தோறும் மாலையில் நடத்தும் பிரார்த்தனையைப் பற்றி அனைவரும் அறிவார்கள். பிரார்த்தனையில் ராம்துன் அதாவது ராம நாம பஜனை நடப்பதும் எல்லோருக்கும் தெரியும்.

"ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதா ராம்"