இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88
நவகாளி யாத்திரை
"சென்னையிலிருந்து 'கல்கி' பத்திரிகையின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். தங்களுடன் சுற்றுப் பிரயாணம் செய்து தென்னிந்தியாவுக்குச் செய்தி அனுப்பப் போகிறேன். தங்கள் உத்தரவு வேண்டும்."
"உனக்கு ஹிந்தி தெரியுமா?"
"தெரியாது."
"வங்காளி தெரியுமா?"
"தெரியாது."
"சென்னையிலிருந்து வர எவ்வளவு பணம் செலவாயிற்று?"
"முந்நூறு ரூபாய்."
"வீண் தண்டம்; அந்தப் பணத்தை ஹரிஜன நிதிக்குக் கொடுத்திருக்கலாமே. சரி, நாளை மறுதினம் திரும்பிப் போய்விட வேண்டும், என்ன?"
"அப்படியே!”
இரண்டே தினங்கள்தான் மகாத்மாவுடன் தங்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இந்த இரண்டு தினங்களுக்குள் நான் அடைந்த அனுபவங்கள் என் வாழ்நாட்களில் வேறு எப்போது கிட்டும்?