26
'அகோ கேளுங்கள் சபையோர்களே! இப்படி யாகத் தானே அரிச்சந்திர மகாராஜனாகப் பட்டவன் நாடு நகர முதலானதுகளை விசுவாமித்திர முனியிடம் கொடுத்துவிட்டுக் காசிக்கு வரும் வழியில் அநேக துயரை யடைந்து காசிநகர்க் கோபுரந் தோன்றக்கண்டு தன் பத்தினிக்குத் தெரிவித்துக் கரங் கூப்பித் தொழுகிறவிதங் காண்பீர்கள் கனவான்களே!'......
இதுதான் பழங்கால நாடக வசனம். இதற்குப் பொது வசனம் என்று பெயர். நாடக விளக்கத்துக்காகக் கட்டியக்காரன் இதைப் பேசுவான். இவ்வாறு பேசப்படும் நீண்ட பொது வசனங்களைத் தவிர, பெரும் பாலும் பாடல்கள்தான். பண்டைக் காலந்தொட்டு நாடகத் தமிழ் இசைத் தமிழோடு சேர்ந்தே வளர்ந்து வந்திருக்கிறது.
அபூர்வமாகச் சில இடங்களில் பாடலின் கருத்தை யொட்டி வசனமாகவும் சில வரிகள் பேசுவதுண்டு.
'கேளாய் பெண்ணே சந்திரமதி! லோகத்திலுள்ளவர்கள் செய்யும்படியான சகல பாவங்களையும் போக்கத் தக்கதாகிய திவ்ய மகிமை பூண்ட இந்தக் காசி நாடு வந்தோம் பாராய் பெண்ணே!'
அவ்வளவுதான். உடனே, 'கரங்குவிப்பாய் மயிலே, இதோ காசி காணுது பார் குயிலே'
என்று மீண்டும் பாடத் தொடங்கி விடுவான் அரிச்சந்திரன்.
சீர்காழி அருணாசலக் கவிராயர் அவர்களால் எழுதப் பெற்ற இராம நாடகம், அசோமுகி நாடகம் ஆகியவை