பக்கம்:நாடகக் கலை 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைவு விழாவின்போது 'சங்கரதாஸ் சுவாமிகள் நாடக உலகின் இமயமலை' யென்று உணர்ச்சியோடு குறிப்பிட்டார். இது முற்றிலும் பொருந்தும். சுவாமிகளின் நாடக நூல்கள் அழிந்துபோகவில்லை. எங்களைப் போன்ற மாணாக்கர்கள் சிலரிடம் இருக்கின்றன. சுவாமிகளின் 'அபிமன்யு சுந்தரி, சுலோசனு சதி என்னும் சிறந்த நாடகங்கள் அண்மையில் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கத்தின் ஆதரவோடு வெளி வந்துள்ளன வென்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் அவருடைய மற்ற நாடகங்களையும் அரசாங்கமோ, பல்கலைக்கழகமோ ஏற்று அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டுமென்பது என் வேண்டுகோள். இன்று நம்மிடையே வாழும் தமிழ்ப் பேரறிஞர்கள் சுவாமிகளின் நாடக நூல்களைப் பார்க்க இயலுமானால் அவரது பெருமை குன்றின் மேலிட்ட தீபம்போல் ஒளி வீசும் என்பதை உறுதியாகச் சொல்லுவேன்.

தூத்துக்குடியில் 1867-ல் பிறந்து நாடக உலகின் இமயமலையாகத் திகழ்ந்த இப்பெரியார் 1922-ல் புதுவையில் தமது 55-வது வயதில் பூதவுடல் நீத்தார்.

ஏனைய நாடகப் புலவர்கள்

இவர் காலத்தையொட்டி முத்தமிழாகரம் ஏகை. சிவசண்முகம் பிள்ளை என்பவர் இராமாயண நாடகத்தை தி.நாராயணசாமிப் பிள்ளை நாடக சபைக்காக எழுதினார். இன்று நடைபெற்று வரும் நவாப் இராஜமாணிக்கம் பிள்ளை நாடக சபை வரை அந்த இராமாயணப் பாடல்களைப் பாடப்பெற்று வருவது, அப் பாடல்களை இயற்றிய ஆசிரியருக்குப் பெருமை தருவதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/46&oldid=1540581" இலிருந்து மீள்விக்கப்பட்டது