56
இதைத் தொடர்ந்து திரு. நாரண துரைக்கண்ணன் எழுதிய உயிரோவியம் அரங்கேறியது. இந்நாடகம் தமிழ்ச் சுவையும் நகைச் சுவையும் விரவிய உணர்ச்சிச் சித்திரம்.
இதற்குப் பின் நாங்கள் அரங்கேற்றிய மனிதன் என்னும் நாடகம் சமுதாய நாடகங்களில் ஒரு புரட்சியை உண்டு பண்ணி, ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றது. 'மனுஷ்யன்' என்னும் மலையாள நாடகத்தைத் தழுவித் திருவாளர்கள் பா. ஆதிமூலம், நா. சோமசுந்தரம் ஆகியோர் எழுதிய நாடகம் இது.
அடுத்ததாக எங்கள் குழுவில் உருவான நாடகம் திரு. அகிலன் எழுதிய புயல். இந்நாடகம் நாங்கள் நடத்திய தமிழ் நாடகப் போட்டியில் பரிசு பெற்ற நாடகங்களில் ஒன்று.
திரு.ரா.வேங்கடாசலம் எழுதிய முதல் முழக்கம் என்னும் வீரபாண்டியக் கட்டபொம்மன் நாடகத்தைக் கடைசி முழக்கமாக நடத்தி, எங்கள் நிரந்தர நாடகக் குழுவிற்கு 1950-ல் மூடு விழா (நிறைவு விழா) நடத்தினோம்.
மூடுவிழா ஏன்?
பேசும் படம் வந்த காலத்தில் எல்லா நாடுகளிலும் ஏற்பட்டது போலத் தமிழ் நாட்டிலும் நாடக மேடை இறந்துவிடுமென எண்ணினார்கள். ஆனால், எனக்குத் தெரிந்த வரையில் நாடக மேடையை நல்ல முறையில் கையாண்டவர்கள் யாரும் அழிந்து விட வில்லை. திரைப்பட வளர்ச்சியால் நாடக மேடையும் புதிய புதிய நுணுக்கங்கள் பலவற்றைக் கையாண்டு