ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்
5
என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. நான் அப்பொழுது கற்றறிந்த கதைகள் பிறகு நான் நாடகம் எழுதுவதற்கு உபயோகப்பட்டன என்பது திண்ணம். ஆகவே நான் நாடக ஆசிரியன் ஆனதற்கு, என் முதல் தெய்வமாகிய மாதாவுக்கே கடன்பட்டிருக்கின்றேன். எனக்கிப்பொழுது வயது ஐம்பத்து எட்டுக்கு மேல் ஆகிறது. என் தாயார் எம் பெருமான் திருவடியை அடைந்து நாற்பது வருடங்களாகின்றன. ஆயினும் இப்பொழுதும் அவர்களை நினைத்து இதை எழுதும்பொழுது என்னையுமறியாதபடி எனக்குக் கண்ணீர் வருகிறது.
நான் நாடக ஆசிரியனானதற்கு இரண்டாவது காரணமாக, என் தந்தையார் (காலஞ்சென்ற பம்மல் விஜயரங்க முதலியார் அவர்கள்) எங்கள் வீட்டில் சேர்த்துவைத்த தமிழ் ஆங்கிலேயப் புஸ்தகங்களே என்று கூறவேண்டும். அவர் கலாசாலையில் தேறின பிறகு, முதலில் தமிழ் உபாத்தியாயராக இருந்தார். பிறகு பள்ளிக்கூடங்களைப் பரீட்சை செய்யும் “இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ்"என்னும் உத்தியோகத்தில் அமர்ந்திருந்தார். தானே தமிழ் வாசக புஸ்தகங்கள் முதலிய பல அச்சிட்டார். இவை காரணமாக எங்கள் வீட்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் புஸ்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்தன. தமிழ்ப் புஸ்தகங்களை அச்சிடும் ஒவ்வொருவரும் அவருக்கு ஒரு புஸ்தகம் அனுப்புவதுண்டு. நான் தமிழ் நன்றாய்ப் படிக்கத் தெரிந்த நாள் முதல், அவரிடமுள்ள தமிழ்க்கதைப் புஸ்தகங்களையெல்லாம் ஒவ்வொன்றாகப் படித்து வந்தேன்; அங்ஙனமே ஆங்கிலம் படிக்கக் கற்றவுடன், ஆங்கிலேய கதைப் புஸ்தகங்களையும் நாடகங்கள் முதலியனவையும் படிப்பேன். இவ்வாறு ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி எழுதிய நாடகங்களையும் அச்சிறு வயதிலேயே படித்தேன். அச்சிறு வயதில் மேற்கண்ட புஸ்தகங்களில் நான் அர்த்தம் அறியக்கூடாத பல வார்த்தைகளும் சொற்றொடர்களும் இருந்தன என்றாலும், மொத்தத்தில் கதைகளைக் கிரஹித்துக் கொள்வேன். அக்கதைகளை யெல்லாம் படிக்கும்பொழுது, அக்கதைகளின் நாயகர்களாக என்னையே பாவித்துக்கொண்டு, அவர்கள் துக்கப்படுங்கால் நானும் துக்கப்படுவேன்; அவர்களுக்கு யாராவது இடையூறுகள் செய்யுங்கால் கோபங்கொள்வேன்;