பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

17


கௌவரமாக மதிக்கப்படாது, ஏதோ கொஞ்சம் இழிவான தொழிலைச் செய்வதுபோல் பெரும்பாலும் மதிக்கப்பட்டது என்பதை எனது நண்பர்கள் அறியும் பொருட்டே.

இந்த விளம்பரத்துடன் சுகுண விலாச சபையில் அங்கத்தினராகச் சேர விரும்புவோர்களெல்லாம், கையொப்பமிட்டு அனுப்பும்படியாக ஒரு துண்டுக் காகிதத்தையும் சேர்த்திருந்தோம். அதில் கையொப்பமிட்டு எத்தனை பெயர் அங்கத்தினராகச் சேர்கிறார்கள் என்று ஒரு மாதம் வரையில் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தோம். நிர்வாக சபையிலிருந்த எனது நண்பர்கள் அநேகம் பெயர் சேர்வார்கள் என்று மிகவும் உற்சாகத்துடன் பேசினார்கள். எனக்கு மாத்திரம் சந்தேகமாக வேயிருந்தது. நான் எண்ணியபடியே, ஒரு மாதத்தில் பத்துப் பன்னிரெண்டு பெயர்தான் சேர்ந்தனர். ஆயினும் இது எனது நண்பர்களுடைய உற்சாகத்தைக் குறைத்தபோதிலும், எனது உற்சாகத்தைக் குறைக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம், நான் அதிகமாய் ஆசைப்படாததே என்று நம்புகிறேன். இக்குணமானது, உலக வாழ்க்கையில் அநேக விஷயங்களில் எனக்கு அந்நாள் முதல் இந்நாள்வரை மிகவும் உபயோகப்பட்டு வருகிறது. இக்குணத்தை எனது வாலிப நண்பர்கள் ஒரு நற்குணமாகக் கொண்டு, அதன்படி நடந்துவருவார்களாயின், அது அவர்களுக்குப் பெரும் நன்மையைப் பயக்கும் என்று உறுதியாய் நம்பி இதை இங்கு எழுதலானேன். எந்தக் காரியத்தை மேற்கொண்டாலும் அதில் அதிகப் பலனை அடைவோம், பெரும் ஜெயத்தைப் பெறுவோம் என்று கருதாது, “சிறுகக்கட்டி பெருக வாழ்” என்னும் பழமொழியினைப் பற்றுக்கோடாகக் கொண்டு, சிறிது பலன் கிடைத்த போதிலும் சந்துஷ்டியடைந்து, எடுத்துக் கொண்ட முயற்சியை மாத்திரம் கைவிடாமல் அதை நிறைவேற்ற கஷ்டப்பட வேண்டியது மாந்தர் கடன்; பலனை அளிப்பது பரமனது அருள் என்று நம்பினவராய் நடந்து வந்தால் எவர்களுக்கும் இன்பம் அதிகமாகவும், துக்கம் குறைவாகவும் கிடைக்குமென்பது என் ஆயுட்காலத்தில் நான் அறிந்த ஓர் உண்மையாம். இதனால் நான் அடைந்த பலனை, இதனை வாசிக்கும் எனது நண்பர்களும் பெறுவார்களென்று இதை இங்கு எழுதலானேன்.