பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

நாடக மேடை நினைவுகள்


சபை ஸ்தாபித்து ஒரு மாதம் ஆனபிறகு, என்ன நாடகத்தை நாங்கள் நடத்துவது என்கிற முக்கியமான கேள்வி பிறந்தது. அக்காலத்தில் அச்சிடப்பட்டிருந்த தமிழ் நாடகங்கள் மிகச் சில. அவைகளைக் கைவிரலில் நாம் எண்ணிவிடலாம். அவைகள் ஏறக்குறைய எல்லாம் புராண இதிகாசக் கதைகளாயிருந்தன. அவை அரிச்சந்திர நாடகம், மார்க்கண்டேயர் நாடகம், இரணியவிலாசம், சிறுத்தொண்டர் நாடகம் முதலியவைகளாம். இவைகளெல்லாம் எங்களுக்குப் பிடிக்கவில்லை. அன்றியும் நிர்வாக சபையார் இவ்விஷயத்தைப் பற்றி ஆலோசித்தபொழுது, மற்றவர்கள் ஆடும் நாடகங்கள் நாம் ஆடக்கூடாது, புதிதான தமிழ் நாடகங்களே நாம் ஆடவேண்டுமென்று நான் வற்புறுத்தினேன். நான் இதன் சார்பாக எடுத்துக் கூறிய நியாயங்களை எனது நண்பர்கள் ஒப்புக்கொண்டனர். அதன் மீது சபையின் காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார் தனக்குத் தெரிந்த தமிழ் வித்வான்களுக்குக் கடிதம் எழுதி அவர்களைக் கொண்டு ஏதாவது நூதன தமிழ் நாடகம் எழுதிக் கொடுக்க முடியுமா என்று விசாரிப்பதாகச் சொன்னார். என்னையும் அப்படியே விசாரிக்கும்படி சொன்னார்கள். அதன்பேரில், அதுவரையில் அச்சிடப்பட்டிருந்த சில தமிழ் நாடகங்களைப் படித்து அவற்றின்மீது வெறுப்புக்கொண்டிருந்த நான், என்னுடைய ராசாங்க கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த எனது பால்ய நண்பராகிய ராமராயநிம்கார் என்பவருடன் இதைப்பற்றிக் கலந்து பேசினேன்; இவர்தான் பிற்கால “பானகல் ராஜா” என்கிற பட்டம் பெற்ற பெரியோர். பல்லாரி சரச வினோத சபையாருடைய ‘சிரகாரி’ என்னும் நாடகத்தை நான் பார்த்தது போல் இவரும் பார்த்தவர். தெலுங்கு பாஷையில் அக்காலத்திலேயே மிகுந்த தேர்ச்சியுடையவராய் இருந்தார்; எனக்குத் தெலுங்கு பாஷையில் இப்பொழுதிருக்கும் சிறிது பயிற்சியும் அப்பொழுது இல்லாதிருந்ததால், இவரை, நாங்களிருவரும் கண்ட மேற்குறித்த தெலுங்கு நாடகத்தை, ஆங்கிலேய பாஷையில் எழுதித்தரும்படி வேண்டினேன். அச்சமயம் எனது நோக்கம் என்னவென்றால் அதைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமென்பதே. என் வேண்டுகோளுக் கிணங்கி எனது நண்பர் அந்நாடகத்தை வெகு அழகாக ஆங்கில பாஷையில், எனக்காகக் கஷ்டப்பட்டு எழுதிக் கொடுத்தார்.